மேலும் அறிய
Thaipusam 2025: தைப்பூச விழா; முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
Source : whats app
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
முருகனின் முதற்படை வீடு
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் முதற்படை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருப்பது சிறப்பான ஒன்று. இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழர்களால் கொண்டாடும் தைப் பூசம்
பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் உருவான கந்தனிடம் தாயார் சக்தி தேவி அசுரனை அழிப்பதற்காக வேல் கொடுத்தது, தைப்பூச நாள் என்பதால் இந்த நாள் தமிழர்களால் மிகவும் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஆலயங்களிலும், முருகப்பெருமான் ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வர். தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, சீனா என உலகெங்கிலும் உள்ள முருகனின் திருக்கோயில்களில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நாளில் முருகன் கையில் உள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். தைப்பூசத் திருநாள் பழனியில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்றாலும், முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
சாமி தரிசனம்
அதன் ஒரு பகுதியாக ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண தரிசனத்தில் வருபவர்கள் கோயிலுக்கு இடப்புறமாகவும் இலவச தரிசனத்தில் செல்பவர்கள் கோயிலுக்கு வளப்புறமாகவும் கிரிவலப் பாதை நெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது
மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் திருப்பரங்குன்றம் கோயிலின் உப கோயில் ஆன காசி விஸ்வநாதர் கோயில் செல்லும் வழியில் உள்ள கோட்டைதெரு பழனி ஆண்டவர் சந்நிதியில் பழனியாண்டவருக்கு காலை 10 மணிக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Magizh Thirumeni : விடாமுயற்சி வெற்றி! அஜித் சார் ஹேப்பி இதுக்கு மேல என்ன வேணும்.. மகிழ் திருமேனி ஓபன் டாக்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion