கரூர்: பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
சுக்காம்பட்டியில் பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் பாதாள லிங்கேஸ்வர பெருமாள், அதர்வண பத்ரகாளியம்மன், துர்க்கை அம்மன், விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்கள் கொண்ட கோயில் புதிதாக கட்டப்பட்டது

கரூர், சுக்காம்பட்டியில் 21 அடி உயர பிரம்மாண்ட பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம், பண்ணப்பட்டி ஊராட்சி சுக்காம்பட்டியில் பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் பாதாள லிங்கேஸ்வர பெருமாள், அதர்வண பத்ரகாளியம்மன், துர்க்கை அம்மன், விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்கள் கொண்ட கோவில் புதிதாக கட்டப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக 21 அடி உயர பிரம்மாண்ட பதினெட்டாம்படி கருப்பணசாமி சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு யாக வேள்வி சாலையில் வைத்து சிவாச்சாரியார்கள் மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, நாடிசந்தனம், லட்ச்சார்ஜனை திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட ஆறு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். தொடர்ந்து இன்று காலை 6ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க புனித நீர் குடத்தினை ஊர்வலமாக கொண்டு வந்து தமிழ் வேத மந்திரங்கள் முழங்க பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் கோபுர கலசத்திற்கு ஊற்றினர்.

அதனை தொடர்ந்து கலசத்திற்கும் ,சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கூடியிருந்த அனைத்து பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசத்தை பெற்றுச் சென்றனர் மேலும் ஆலயம் அருகே அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.





















