TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
TNPSC Group 4 Exam: பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?- எடப்பாடி பழனிசாமி கேள்வி.

குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்; மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்- 4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A 4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.
பாடத் திட்டத்துக்கு வெளியே கேள்விகள்
பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
குரூப் 4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள், அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட பதவி.
எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?
பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது? ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப் 4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் குரலாக அதிமுக என்றும் ஒலிக்கும்’’!
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி மறுப்பு
இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் குரூப் 4 விடைத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் பிரிக்கப்பட்டு, விடைத் தாள்கள் வெளியே எடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு, டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






















