![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
இலங்கையின் நீண்டகால நில உரிமை போராட்டம்.. 700 குடும்பங்களுக்கு பத்திரம் வழங்கிய ஆளுநர் செந்தில் தொண்டமான்!
இலங்கை வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 700 தமிழ் குடும்பங்களுக்கு நில உரிமத்திற்கான பத்திரம் வழங்கப்பட்டது.
![இலங்கையின் நீண்டகால நில உரிமை போராட்டம்.. 700 குடும்பங்களுக்கு பத்திரம் வழங்கிய ஆளுநர் செந்தில் தொண்டமான்! Sri Lanka: 700 Tamil families were given land license deed in Verugal Division Secretariat இலங்கையின் நீண்டகால நில உரிமை போராட்டம்.. 700 குடும்பங்களுக்கு பத்திரம் வழங்கிய ஆளுநர் செந்தில் தொண்டமான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/30/57850318e7bb1c55b79515d424ec454c1690693783430571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலங்கை வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 700 தமிழ் குடும்பங்களுக்கு நில உரிமத்திற்கான பத்திரம் வழங்கப்பட்டது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் நில உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிலம் உரிமைக்காக ஆயுதம் ஏந்திய வரலாறும் உயிர் தியாகம் செய்த வரலாறும் இலங்கையில் மறக்க முடியாத வடுவாக இருக்கிறது.
இந்நிலையில் கிழக்கு மாகாணம் திருக்கோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பல துன்பங்களை அனுபவித்து வரும் குடும்பங்கள், பல வருட காலங்களாக தமது நில உரிமைக்காக போராடி வருகின்றனர்.
நிலம் உரிமை எப்போது கிடைக்கும் என ஏங்கித் தவித்து வந்த சுமார் 700 தமிழ் குடும்பங்களுக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் குறுகிய கால, இடைவிடா முயற்சியின் பயனாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் 700 தமிழ் குடும்பங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நில உரிமம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் நில உரிமை பிரச்சினையில் தலையிட மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை, நில உரிமை வேண்டும் என அரசியல் ரீதியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது தொடர் முயற்சியால் வெருகல் பிரதேச மக்கள் அனுபவித்த வேதனை, பாதிப்புக்களை கருத்தில் கொண்டு ஆளுநராக தனது உச்சகட்ட அதிகாரங்களையும் பயன்படுத்தி நில உரிமங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
காலம் காலமாக நில உரிமை கேட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. கிழக்கில் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இருந்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பதவியேற்று குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் நில உரிமை விஷயத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்துள்ள நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் புது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
வெருகல் பிரதேச நில விஷயத்தில் ஆளுநர் செயற்பட்ட விதம் வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் பாராட்டுக்கு உட்பட்டுள்ள நிலையில் ஆளுநர் செந்தில் தொண்டமான் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அங்கு அதிகரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)