17 ஆண்டுக்கு பின் நடந்த பூலாநந்தீஸ்வரர் கோயில் குடமுழக்கு விழா.. களைகட்டிய தேனி மாவட்டம்
நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னோர்களால் கட்டப்பட்ட ஒவ்வொரு பெரிய கோவிலும் பல புராண, வரலாற்று கதைகளை நினைவுபடுத்தும் விதமாக உள்ளன. நாம் பல கோவில்களில் சுவாமி தரிசனம் செய்திருப்போம். அப்போது நீங்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது சுவாமியின் சிலை உங்களை விட உயரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது உணர்ந்திருப்பீர்கள்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் கோவிலின் மூலவர் எப்படி பார்த்தாலும் ஒரே உயரத்தில் காட்சி தரும் வகையில் சிவ பெருமான் காட்சி தருகின்றார். அதாவது நீங்கள் நின்று தரிசித்தாலும் சரி, அல்லது மூலவரின் முன் அமர்ந்து தரிசித்தாலும் உங்கள் உயரத்திற்கு ஏற்ப உயரம் மாறி தெரியும் லிங்கமாக பூலாநந்தீஸ்வரர் காட்சி தருகின்றார்.
பழங்காலத்தில் இந்த பகுதிக்கு ‘அள நாடு’ என அழைக்கப்பட்டது. இதன் தலைநகரமாக வீரபாண்டி இருந்தது. மன்னர் ராஜசிங்க பாண்டியன் ஆண்டு வந்தான். அவனின் அரண்மனையில் பணிசெய்த ஒருவர் தினமும் பாலுடன் இந்த காட்டு பகுதி வழியாக வருவது வழக்கம். ஆனால் சில நாட்களாக அந்த வழியாக வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூலா மரத்தின் வேர் தடுக்கி கீழே தள்ளிக் கொண்டிருந்தது. இந்த நிலை தொடரவே மன்னனிடம் இது குறித்து தெரிவித்தார் என நம்பப்படுகிறது.
பணியாளரிர் கூறியதை கேட்ட மன்னன் உடனே அந்த இடத்தை தோண்டிப் பாருங்கள் என உத்தரவிட்டார். அப்போது அங்கு தென்பட்ட ஒரு லிங்கத்திலிருந்து கிளம்பிய ஜோதி விண்ணுக்கும், மண்ணுக்கும் வளரத் தொடங்கியது. சிவ லிங்கத்தை தரிசித்த ராஜசிங்க பாண்டியன், ஈசனே தயவு செய்து என் உயரத்திற்கு ஏற்ற அளவுடன் நேரில் காட்சி தந்து அருளுங்கள் என வேண்டுக் கொண்டான். உடனே மன்னனின் அளவிற்கு மாறிய அந்த சிவ லிங்கத்தைப் பார்த்து வியந்து, ‘அளவுக்கு அளவானவரே’ என புகழ்ந்தார். மனனன் சுவாமியின் மார்பில் தன் முகம் பதிய கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவித்தார். அன்று முதல் மூலவருக்கு ‘பூலாநந்தீஸ்வரர்’ என பெயர் சூட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இவ்வாறு மிகவும் பிரசித்திபெற்று விளங்கும்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து சமய அறநிலையத் துறையினரின் நிர்வாக கட்டுப்பாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு இன்று நடைபெற்றது. கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவினை தமிழக அரசு சார்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து பல்வேறு புனரைமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழாவினை மிக விமர்சையாக நடத்தினார்கள். விழாவில் கோவிலில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு மூன்று கால யாக பூஜைகள், மண்டல பூஜைகளை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து கோவில் கலசத்தில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி பக்தர்கள் வெள்ளத்தில் கும்பாபிஷேக விழாவினை நடத்தினார்கள். பக்தர்களுக்கு புனித நீர் தெளித்து கோபுர கலசத்திற்கும் தீபாரதனை காட்டினார்கள்.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விழா கமிட்டியினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்கள். 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் தேனி மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

