Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Trump: இந்தியாவின் மீது புதிய வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.

Trump: இந்தியா மீது ட்ரம்ப் விதித்துள்ள புதிய வரிகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
மோடியை பாராட்டிய ட்ரம்ப்:
இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ட்ரம்ப், “பிரதமர் மோடி சமீபத்தில்தான் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது கொடூரமானது. அவர் (மோடி) மிகவும் புத்திசாலியான மனிதர், உண்மையில் என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் மிகவும் நல்ல பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியாவிற்கும் நமது நாட்டிற்கும் இடையேயான புதிய வரி மிகவும் நன்றாக வேலை செய்யும் என்று நான் நினைக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
இறக்குமதி கார்களுக்கு 25% வரி
அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து இறக்குமதி வாகனங்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, ட்ரம்ப்பின் இந்த பதில்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த வரிகள், அமெரிக்காவில் விற்கப்படும் 50 சதவிகித வாகனங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் வெளிநாடுகளில் அசெம்பிள் செய்யப்படும் அமெரிக்க பிராண்டுகள் அடங்கும்.
கடந்த பிப்ரவரியில் ட்ரம்ப் பரஸ்பர வரிகளை அறிவித்தார். அதன்படி, "நாங்கள் விரைவில் பரஸ்பர வரிகளை விதிப்போம். அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். இந்தியா அல்லது சீனா போன்ற ஒரு நிறுவனம் அல்லது நாடு எது வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம், எனவே, பரஸ்பர வரி விதிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
500 பில்லியன் டாலர்கள் இலக்கு:
பிரதமர் மோடி பிப்ரவரியில் வாஷிங்டன் டிசிக்கு சென்று, டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக உறவை ஆழப்படுத்தவும், நியாயத்தன்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை உறுதி செய்யும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் தீர்மானித்தன. பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒரு புதிய இருதரப்பு வர்த்தக இலக்கை - 'மிஷன் 500' - நிர்ணயித்தனர். அதன்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த இருவழி பொருட்கள் மற்றும் சேவை வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
கலக்கத்தில் இந்தியர்கள்:
பரஸ்பர வரி விதிப்பால் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு இதுநாள் வரை ஏற்றுமதி செய்து வந்த பல பொருட்களுக்கு, செலுத்தி வந்த வரியை காட்டிலும் கூடுதல் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதோடு, வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளில், இந்தியாவும் முதன்மையானதாக உள்ளது. ஒருவேளை அமெரிக்கா அச்சுறுத்தலால், வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால், இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம். அதனால், அவற்றின் விலை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயரலாம். மொத்தத்தில் ட்ரம்பின் வரி நடவடிக்கைகளால், இந்தியர்களும், இந்திய வணிகர்களும் கலக்கத்தில் ஏழ்ந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

