சுப முகூர்த்த தினம்.. சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் கிடைக்கும்!
தை மாதத்தின் முதல் வேலை நாளான 20.01.2025 அன்று சுபமுகூர்த்த தினமாக உள்ளதால், அன்று அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 18ஆம் தேதி, ஒருநாள் மட்டும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு செயல்டுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை அளித்தும், 20ஆம் தேதி அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கூடுதல் டோக்கன்கள் விநியோகம்:
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையினை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக 14.01.2025 முதல் 16.01.2025 வரை தொடர் அரசு விடுமுறை உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களின் 17.01.2025 அன்று வெள்ளிகிழமை விடுமுறை அளிக்க கோரிக்கை பெறப்பட்டதின் அடிப்படையில் அக்கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிகிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் முதல்மைச்சர் உத்திரவிட்டுள்ளார்.
ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லும் மக்களுக்கு கவலை இல்லை:
எனவே, மேலே குறிப்பிட்டுள்ளபடி 17.01.2025 வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில் அதன்பின் வரும் 18.01.2025 அன்று சனிகிழமையில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு 18.01.2025 அன்று ஒருநாள் மட்டும் செயல்படுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும். தை மாதத்தின் முதல் வேலை நாளான 20.01.2025 அன்று சுபமுகூர்த்த தினமாக உள்ளதால், அன்று அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று, 20.01.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.