புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 6 பேர் ₹7.50 லட்சம் இழப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்
புதுச்சேரியில் பகுதி நேர வேலை என கூறி 3 பெண்கள் உட்பட 6 பேரிடர் ரூ.7.50 லட்சம் மோசடி.
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.7.50 லட்சம் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த ஆண் நபரை, முகநூல் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை.
அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், பங்கூரைச் சேர்ந்த பெண் 30 ஆயிரத்து 400, நெல்லித்தோப்பை சேர்ந்த பெண் 6 ஆயிரம், முத்தியால்பேட்டையை சேர்ந்த நபர் 30 ஆயிரத்து 752, கோரிமேட்டை சேர்ந்த நபர் 4 ஆயிரம், கணுவாப்பேட்யை சேர்ந்த பெண் ஆயிரத்து 450என 6 பேர் மோசடி கும்பலிடம் 7 லட்சத்து 50 ஆயிரத்து602 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சைபர்கிரைம் புகார்
இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். சைபர் குற்றம் சம்பந்தமாக 1930, 0413-2276144, 9489205246 எண்களில் புகார் அளிக்கலாம் என்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர்.
தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.





















