TNPSC Controversy: அய்யா வைகுண்டர் அவமதிப்பு? டிஎன்பிஎஸ்சி தேர்வு மொழிபெயர்ப்பில் குளறுபடி; குமுறும் தேர்வர்கள்- நடந்தது என்ன?
அரசுப் பணிக்கான தேர்வுகளின் மொழிபெயர்ப்புகள், அவசர கதியில் செய்யப்பட்டுள்ளது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக்காக ( இளநிலை உதவி வரைவாளர் பணி) மாநிலம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 31) தேர்வு நடைபெற்றது. இதன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கான மொழி பெயர்ப்பில் குளறுபடிகள் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
the god of hair cutting
அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற பெயர், "the god of hair cutting" என்று மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
பிச்சை எடுத்தார்களா?
இன்னொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பது, "It Begged the United Nations award" - பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது.

இதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுப் பணிக்கான தேர்வுகளின் மொழிபெயர்ப்புகள், அவசர கதியில் செய்யப்பட்டுள்ளது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவு:
''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம், இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.
அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, "It Begged the United Nations award" - பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்
திமுக தலைவர்கள், காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது.
எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.























