விளையாட்டு வீரர்களே... உங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு: முழுமையான விபரங்கள் இதோ!!!
3 சதவீத இடஒதுக்கீட்டில் கீழ் விண்ணப்பிக்க தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. யாருக்கு தெரியுங்களா? விளையாட்டு வீரர்களுக்குதான். 3 சதவீத இடஒதுக்கீடு... ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம். இதற்கு என்ன தகுதிகள் என்று தெரிஞ்சுக்கிட்டு உடனே உங்க விண்ணப்பத்தை தட்டி விடுங்க. வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
தமிழ்நாட்டில் அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு கீழ் அரசு வேலை பெற விரும்பும் வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பணியில் 3 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு 2025-ம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு விளையாட்டுகளில் பதக்கம் வெற்று சாதனைப் படைத்த வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்னென்ன மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்று முழு விபரங்கள் இதோ உங்களுக்காக.
தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், சர்வதேச அளவிலான போட்டிகள், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 3% விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பெறப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
3 சதவீத இடஒதுக்கீட்டில் கீழ் விண்ணப்பிக்க தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறைக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பதவிக்கு ஏற்ப அனைத்து குறைந்தபட்ச கல்வித்தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், வீரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பாரா - தடகள வீரர்களுக்கான வயது வரம்பு 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
எந்தெந்த போட்டிகளில் பங்கேற்றவர்களாக இருக்கணும்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், IOC மூலம் அங்கீகரிக்கப்பட்ட ISF கீழ் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள், IOC மூலம் அங்கீகரிக்கப்பட்ட ISF கீழ் 4 அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள் ஆகியவற்றில் வெற்றிபெற்றவர்களாகவோ அல்லது பங்கேற்றவர்களாகவோ இருக்க வேண்டும்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களாக மட்டும் இருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SADT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.
சரிங்க எப்படி விண்ணப்பம் செய்வது
தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பிற்கு https://sdat.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் தொடங்கப்பட்ட நிலையில் வரும் செப்டம்பர் 24-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேல் குறிப்பிட்டுள்ள போட்டிகளில் பங்கேற்று, 3 சதவீத இடஒதுக்கீட்டில் தமிழக அரசு வேலைக்கு தகுதிபெற்ற விளையாட்டு வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.





















