![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பாஜகவினருக்கு அனுமதி மறுப்பு
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
![கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பாஜகவினருக்கு அனுமதி மறுப்பு denial of permission to protest against power minister in karur TNN கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பாஜகவினருக்கு அனுமதி மறுப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/723a707de9b4a3f165f7e1f60abc77901662970188513183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியை பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அறிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்டதாக கூறி பணி வழங்கப்படாமல் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு சமரசம் என்ற காரணத்தால், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
உச்சநீதிமன்றம் விசாரித்த வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது திமுக ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வழக்கு விசாரணை முடியும் வரை தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது முதல்வரே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட பாஜக சார்பில் கோரிக்கை வைத்ததுடன், 3 நாள் கெடு வழங்கப்பட்டிருந்தது.
அது நடக்காதபட்சத்தில் மாவட்ட பாஜக சார்பில் இன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக காவல் துறை காண்காணிப்பாளர் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதலே கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கட்சி அலுவலகத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வந்த பாஜக மாவட்ட தலைவர் செந்தில் நாதன், செய்தியாளர்களை சந்தித்தார். செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம், தவறும்பட்சத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக அழைத்து வந்துள்ளனர். போராட்டத்திற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை போலீசார் வழிமறித்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கதக்கது. மாநில தலைவரின் அறிவுறுத்தலின் பெயரில் நீதிமன்றம் சென்று ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி பெற்று, மீண்டும் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக கோரி கண்டன கோஷங்களை சிறிது நேரம் எழுப்பினர். அதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தும்படி அறிவுறுத்தியதன் அடிப்படையில் கலைந்து சென்றனர். கரூர் மாநகரில் முக்கிய இடங்களில் 300க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)