நாளை முதல் 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறுவது? மறுகூட்டல், மறுமதிப்பீடு தேதிகள்!
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 13.06.2025 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 17.06.2025 (செவ்வாய்கிழமை) வரை பெறலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களின் நகலினை இணையதளத்தில் நாளை (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
மார்ச்/ ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 13.06.2025 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 17.06.2025 (செவ்வாய்கிழமை) வரை பெறலாம்.
எப்படி?
- மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- அதில், Notification-ஐ க்ளிக் செய்தவுடன் "SSLC, March/April 2025 - Scripts Download" என்ற வாசகம் தோன்று,
- அதை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி?
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல்அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் "Application for Retotalling/ Revaluation" என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 16.06.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல் 18.06.2025 (புதன்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Press Release என்பதை க்ளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையைப் பணமாக டுசலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-
மறுகூட்டல்
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.






















