மீனவர்களுக்கு ஐஸ் பிளான்ட் அமைக்க மானியம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியத்துடன் கூடிய ஐஸ் பிளாண்ட் அமைக்க மாவட்ட மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவிப்பு

கடலுார்: மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியத்துடன் கூடிய ஐஸ் பிளாண்ட் அமைக்க மாவட்ட மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ஐஸ் கட்டி உற்பத்தியில், தற்போதைய நிலையில், வணிக ரீதியான ஐஸ் கட்டி தொழிற்சாலைகள் உள்ளன. மீன்பிடித் தொழில் மூலம் மீன் பதப்படுத்தல் மற்றும் குளிர்பானங்கள் தயாரித்தல் போன்ற தேவைகளுக்குத் தேவையான ஐஸ் கட்டிகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளானது (Ice cubes) பல்வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன்களைப் பதப்படுத்துவதற்காக கிலோ கணக்கில் இந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துகின்றனர். மீன் சந்தைகளிலும், காய்கறி சந்தைகளிலும் இந்த ஐஸ் கட்டிகள் பெரும் அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குளிர்பானங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவில் இந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவது மீனவர்களே.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,
மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 20 டன் கொள்ளளவு கொண்ட மானியத்துடன் கூடிய ஐஸ் கட்டி உற்பத்தி (ஐஸ் பிளான்ட்) நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவின் கீழ் ஐஸ் கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க மத்திய அரசு நிதி ரூ.80 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் 40 சதவீதம் என்ற விதத்தில் ரூ.32 லட்சம் மத்திய அரசு மானியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற மீன்பிடித் தொழில் அல்லது அதனை சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராகவும், கடலுார் மாவட்டத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
திட்டம் துவங்க வழிகாட்டு நெறிமுறைகள் படி, விண்ணப்பிக்கும் நபருக்கு சொந்த இடம் அல்லது குத்தகை இடமாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ள மீனவர்கள் விண்ணப்ப படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைய தளமான www.fisheries.tn.gov.in-ல் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது விண்ணப்ப படிவங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்கள் இணைத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு கடலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















