சேலம் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பங்களை இணையதளத்தில் நேற்று (7ம் தேதி) காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்து, அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகங்களில் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சேலம் மாவட்ட குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ், செயல்படும் குழந்தைகள் மையங்களில், 196 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 215 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 417 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள், மாவட்ட திட்ட அலுவலகம், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை இணையதளத்தில் நேற்று (7 ஆம் தேதி) காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்து, அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகங்களில் வரும் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர்கள், 12 மாத காலம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். தொகுப்பூதியமாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.7,700, குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.5,700, அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.4,100 என வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அதே கிராம ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்தை சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். இதேபோல், அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டு அல்லது மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து காலிப் பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
மேலும், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர். ஆதரவற்ற பெண் (தாய், தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

