திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்: எதற்காக தெரியுங்களா?
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி: திமுக மாநகராட்சி கவுன்சிலருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி 57வது வார்டு கவுன்சிலர் முத்துசெல்வம். இவர் திமுகவில் திருச்சி மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வார்டுக்கு உட்பட்ட நல்லதண்ணீர் தெருவில் புதிதாக தார் சாலையை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சேதப்படுத்தியதாகவும், சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும் இவருக்கு புகார் வந்தது. தொடர்ந்து சாலையை சேதப்படுத்திய பெண்களிடம் சென்று மாமன்ற கவுன்சிலர் என்ற முறையில் முத்துச்செல்வம் விளக்கம் கேட்டுள்ளார்.
அப்போது அந்த பெண்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துசெல்வம் புகார் மனு அளிக்க சென்றார்.
இங்குதான் இருக்கிறது டுவிஸ்ட்... திமுக கவுன்சிலருக்கு ஆதரவு தெரிவித்தும், ஆக்கிரமிப்பு செய்து சாலையை சேதப்படுத்திய பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கணும் என்று கூறிக் கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால் துணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற போலீசார் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வெளியேற மறுப்பு தெரிவித்து மாநகர கவுன்சிலர் முத்துசெல்வத்திற்கு ஆதரவாக நாங்களும் புகார் கொடுக்க வந்துள்ளோம் என போலீசாரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் காவல் ஆணையர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.
தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பொதுமக்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து மாநகர கவுன்சிலர் முத்துச்செல்வம் மட்டும் மாநகர ஆணையர் காமினி சந்தித்து புகார் மனுவை அளித்தார். இதை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் மாநகர கவுன்சிலர் முத்துச்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: 1986 இருந்து அந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த தனிநபர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். மேலும் வழக்கு தொடுத்து பணி செய்ய விடாமல் தடுத்து வந்தார். 2018ல் அந்த இடம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் 2022-ல் அந்த ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு அளிக்கப்பட்டது. பின்னர் 2023ல் இடத்தை ஆக்கிரமித்த நபர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஆனால் அந்த வழக்கில் சர்வேயர் அளவெடுத்து அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டு கடந்த மாதம் 27ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
அதே நாள் மாலையில் புதிதாக அமைத்த சாலைகளை வழக்கு தொடுத்தவரின் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் சாலையை சேதப்படுத்தியதாக தெரிய வந்து அவர்களை நான் கண்டித்தேன். அவர்கள் தங்கள் வீட்டுக்குள் சென்று அங்கிருந்து கல்லை எடுத்து வீசியும் தகாத வார்த்தைகளாலும் திட்டினர். இது கடந்த மாதம் நடைபெற்றது.
ஆனால் கடந்த இரண்டு நாளைக்கு முன்பு இதுகுறித்த வீடியோவை வலைதளத்தில் பதிவிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத திராவிட மாடல் ஆட்சியா என்று பொய் தகவலை பரப்பினர். எனவே இதுகுறித்து திருச்சி மாநகராட்சி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

