200 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களே கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் சரித்திர நாடகம்
பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.

தஞ்சாவூர்: வைகுண்ட ஏகாதசியில் கண் விழிக்க வேண்டும் என்பதால் 200 ஆண்டுகளாக இரவில் சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர் தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராம மக்கள். அந்த வகையில் இந்தாண்டும் நாடக விழா சிறப்பாக நடந்தது.
தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொக்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.
இரவில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு வள்ளி திருமணம், ருக்மாங்கதன், ராமாயணம், சத்தியவான் சாவித்ரி நாடகங்கள் நடத்தப்படுகிறது.
இந்த நாடகங்களுக்கு தேவையான கதாபாத்திரங்களில் கிராம மக்களே சிறப்பான நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே நடித்து வருகின்றனர். இன்றும் பாரம்பரியத்தோடு சரித்திர நாடகங்களை நடத்தி வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 3 நாட்கள் வள்ளித் திருமணம், ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் கூறுகையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் நாடக பயிற்சியை தொடங்கி விடுவோம்.
எங்கள் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதை கனவாக கொண்டு நடித்து வருகிறோம். முன்பு ஒரு நாடகத்துக்கு 50 கலைஞர்கள் இருந்தார்கள். தற்போது பத்து கலைஞர்கள் தான் நடித்து வருகின்றனர். நாடகம் நடத்த ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்ததும், இதற்காக விரதம் தொடங்கி விடும். நாடக கலைஞர்கள் எல்லோரும் விரதம் இருந்து நடித்து வருகிறோம். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு தொடங்கும் நாடகம் அதிகாலை 5 மணிக்கு முடியும் என்றார்.

