தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்கள் என்றும், இந்தியை யார் திணிக்கிறார்கள்? என்றும் அண்ணாமலை பேசியுள்ளார்.

மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
புதிய கல்விக்கொள்கை:
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, தேசிய கட்சிகள் என்று சொன்னால் கொஞ்சம் நானும் தூரம் இருந்து பார்க்கக்கூடிய விவசாயியின் மகன். காரணம் 1965ம் ஆண்டு முதல் நடந்த குளறுபடிகள். தமிழகத்தில் ஒரு மொழியைத் திணித்து அதைத்தான் படிக்க வேண்டும் என்று சொல்லி, தமிழக மக்களை எல்லாம் கிளர்ச்சி அடையச் செய்து மத்தியில் இருந்த காங்கிரஸ் பெரும் பிரச்சினையை செய்தது.
2019ம் ஆண்டு மே 31ம் நாள் புதிய கல்விக்கொள்கை அறிக்கை கொடுக்கிறார்கள். அந்த அறிக்கையில் இந்தியாவில் அனைவரும் 3 மொழியை கற்க வேண்டும். முதல் மொழி நமது தாய்மாெழியாக தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழாக இருக்க வேண்டும். இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும். கட்டாயம் இந்தியாக இருக்க வேண்டும் என்பது 2019 மோடியிடம் அளிக்கப்பட்ட அறிக்கை.
மும்மொழி:
பிரதமர மோடி அமைச்சரவையில் வைத்து இது ஏற்புடையது அல்ல. 1965ம் ஆண்டு முதல் இதேதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அனைத்து கல்விக்கொள்கையிலும் இதே பிரச்சினைதான். இது மாற வேண்டும் என்று ஜுன் 3ம் தேதி 2019ம் ஆண்டு இந்த கமிட்டி கொடுத்த அறிக்கையை மாற்றுகிறார். 3 மொழிகளை கற்க வேண்டும் என்பது உண்மைதான். 3வது மொழி கட்டாயம் இந்தியாக இருக்கக்கூடாது.
பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்?
இந்திய மொழிகளில் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள். மோடிதான் அதை மாற்றி பிடிச்ச ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறித்தான் இது வெளிவந்தது. தமிழ்நாட்டைச் சாராதவர், குஜராத்தைச் சேர்ந்தவர் அந்த மனிதர் எப்படி யோசிக்கிறார் என்றால், இந்தி தெரியாத மாநிலங்கள் எப்படி யோசிப்பார்கள்? என்று யோசிக்கிறார். என்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். என் தாய்மொழி தமிழ்மொழிக்கு மோடி மரியாதை கொடுத்திருக்கிறார் என்பது முக்கிய காரணம்.
அநியாயத்தைப் பாருங்க:
என்னைப் போன்றவர்கள் பா.ஜ.க.வில் இணைவதற்கு காரணம் மாநிலங்களை முன்னிறுத்தி அரசியல், ஆட்சி செய்ய முடியும் என்று காண்பித்துக் கொண்டிருக்கிறார் மோடி. இப்போது தமிழ்நாட்டில் என்ன அநியாயம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அதே பழைய பஞ்சாங்கத்தை அப்படி எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அய்யோ இந்தியை திணிக்குறாங்க. நாங்க ஆர்ப்பாட்டம் பண்ணப்போறோம். எப்படி இந்தியை திணிக்குறாங்க? இந்தியை யார் திணிக்கிறார்கள்? 3 மொழி படிக்க வேண்டும். காரணம் உலகம் எல்லாம் படிக்குறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

