![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Auto Fare: உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? 12 வாரத்தில் மாற்றி அமைப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
Auto Fare: கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Auto Fare: உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? 12 வாரத்தில் மாற்றி அமைப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி Passenger Auto fare will be adjusted in 12 weeks.. Tamilnadu government in high court Auto Fare: உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? 12 வாரத்தில் மாற்றி அமைப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/cfbee4b228eeb7ad99b009b78c14f64a1695135659259102_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டணம் மாற்றி அமைக்கபப்டும் என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்துள்ளது. மேலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இறுதியாக ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது. அப்போது மீட்டருக்கு கட்டணம் குறைந்தபட்சம் 1.5 கி.மீ க்கு ரூபாய் 25 எனவும், அதன் பின் ஒவ்வொரு கி.மீக்கு ரூபாய் 12 எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், காத்திருப்பு கட்டணம் அதாவது வைட்டிங் சார்ஜ் 5 நிமிடத்துக்கு ரூபாய் 3.50 ஆகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்டோ சங்கங்கள் குறைந்தபட்ச தொகையை ரூபாய் 50 எனவும், அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 என நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுத்தது. மேலும் ஓலா ஊபர் போன்ற செயலியை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் அல்லது அரசே தனியாக இதுபோன்ற செயலியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, மே மாதம் தொழிற்சங்கங்கள், பொது மக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. கருத்துக் கேட்ப்புக் கூட்டம் நடத்தப்பட்டதே தவிர, அரசு தரப்பில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவும், ஆட்டோ செயலியைத் தொடங்கவும் கோரி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவை, நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதற்கு அமுதா ஐஏஎஸ், ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் எனவும் அரசு சார்பில் செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டணம் மாற்றி அமைக்கபப்டும் என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. அதேபோல் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் தரப்பில் கட்டணம் உயர்வு குறித்த பேச்சுகள் சூடிபிடிக்கத் துவங்கியுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் பதிலால் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)