புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
புதுச்சேரியில் போலி விளம்பரத்தை நம்பி ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் விளம்பரத்தை நம்பவேண்டாம் - சைபர்கிரைம் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் சமீப காலத்தில் லோக் அப், வி2, வி3 மற்றும் ஷாப்பி பை போன்ற மொபைல் செயலி மூலம் முதலீடு செய்தால், வாரந்தோறும் லாபத் தொகையை தருவதாக வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரத்தை நம்பி ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர்.
விளம்பரத்தை நம்பி ரூ.1 கோடிக்கு மேல் பணம் இழப்பு
புதுச்சேரியில் போலி விளம்பரத்தை நம்பி ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், சமீப காலத்தில் லோக் அப், வி2, வி3 மற்றும் ஷாப்பி பை போன்ற மொபைல் செயலி மூலம் முதலீடு செய்தால், வாரந்தோறும் லாபத் தொகையை தருவதாக வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வருகின்றது.
அதனை உண்மை என நம்பி அந்த ஆப்களை பதிவிறக்கம் செய்து முதலில் சிறிய தொகையினை முதலீடு செய்கின்றனர். இந்த பணத்திற்கு ஆரம்பத்தில் வாரந்தோறும் லாப பணம் வருகிறது. மேலும், அவர்கள் பல நபர்களை இந்த ஆப் மூலம் சேர்த்துவிட்டால், அதற்கு ஊக்கத்தொகை தருவதாகவும், அதனை ஏற்று உறவினர்கள், நண்பர்கள் போன்ற அனைவருக்கும் அந்த ஆப்பை பற்றி கூறி முதலீடு செய்யுமாறு கூறுகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ. 1 கோடிக்கு மேல் முதலீடு ஏமாற்றம்
பின், ஏராளமான மக்கள் முதலீடு செய்த பின் அந்த ஆப்பை டெலிட் செய்து விடுகின்றனர். அதன்பிறகு தான் சைபர் மோசடி கும்பல் உருவாக்கிய செயலி என்பது தெரிய வருகிறது. இதுபோன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ. 1 கோடிக்கு மேல் முதலீடு செய்து ஏமாந்தது குறித்து போலீசில் புகார்கள் வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் நைஜீரியா, கம்போடியா நாட்டிலிருந்து இத்தகைய ஆப் உருவாக்கி அங்கிருந்து செயல்படுத்துவது தெரியவந்துள்ளது.
ஆகவே, பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். இதுபோன்று சமூக வலைதளங்களில் பல போலி விளம்பரங்கள் உலா வருகின்றது. செயலிகளை முற்றிலும் நம்ப வேண்டாம். சைபர் குற்றம் தொடர்பாக 1930 மற்றும் 0413 -2276144, 94892 05246 எண்களிலும், cybercell-police@py.gov.in, www.cybercrime.gov.in புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.





















