Chennai Police Order: இரவு நேர குற்றத் தடுப்பு; காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன பண்ணப் போறாங்க தெரியுமா.?
சென்னையில் இரவு நேர பணியில் ஈடுபடும் சட்டம் ஒழுங்கு போலீசார், குற்றங்களை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சென்னையில், இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசார், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் வகையில் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது, போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
சென்னை மாநகரக் காவல்துறையின் அறிக்கை
இரவு நேரங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில், வாகனத் தணிக்கை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து வாகன போலீசார், போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு அந்தப் பகுதி இரவு நேர போலீசார்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட எந்த சாலைகளிலும், பைக் ரேஸ் நடத்தக் கூடாது. பைக் ரேஸில் ஈடுபட்டு தப்பிப்போரை, அடுத்த செக் பாயிண்ட்டில் தகவல் தெரிவித்து பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை, சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றங்களை தடுக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அவசர அழைப்புகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதுவும் நடக்கவில்லை என்ற மழுப்பல் பதில் கூறக் கூடாது என்றும் புகார்தாரர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி முடிக்காமல், சம்பவ இடத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், அதிகாலை 2 - 4 மணிக்கு, வங்கிகள், ஏடிஎம்-களில் உள்ள காவலர்கள் தூங்கிவிடுவார்கள் என்பதால், அவர்களை அலெர்ட் செய்ய வேண்டும் எனவும், இரவுப் பணியில் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் காவலன் செயலியில் பதிவேற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஏரியாக்களிலும் 2 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்றும், 2 பேர் தங்கும் அறையில் கூடுதல் நபர்கள் தங்கியிருந்தால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதிய ஓய்வுக்குப் பிறகுதான் இரவுப் பணி வழங்கப்படுவதால், இரவுப் பணியில் ஓய்வு எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் எந்த காவல் நிலையத்திலும் குற்றவாளிகளை வைத்திருக்கக் கூடாது என்றும் வாகன தணிக்கையைப் பார்த்து யாரும் வேகமாக வாகனங்களை இயக்கி தப்பிச் செல்வோரை விரட்டிப் பிடிக்காமல், அடுத்த செக் பாயிண்ட்டுக்கு தகவல் அளித்து அவர்களை பிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.





















