மளிகை கடையில் குண்டு வீசி தப்பி ஓடிய இளைஞர் - கருகிய தின்பண்ட பொருட்கள்
மது பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசி உள்ளார்.

கரூரில் மளிகை கடையில் மண்ணெண்ணெய் குண்டு வீசியதில் தண்ணீர் கேன்கள், தின்பண்டங்கள் கருகி சேதமானது. தப்பி ஓடிய இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (52), இவருக்கு தமிழரசி (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7.00 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி சிகரெட் இல்லை என்று கூறியதால், 2 ரூபாய்க்கு பீடி மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த முகமது அன்சாரி, மது பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசி உள்ளார். மண்ணெண்ணெய் குண்டு வெடித்ததில் கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தின்பண்டங்களும் எரிந்து கருகியது.
அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடியதால் முகமது அன்சாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோணிமலை போலீசார் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

