இந்திய கம்யூ., கட்சியின் தொடர் போராட்டம்... தனியார் நிறுவனங்கள் செய்திருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆறு தனியார் தொழிற்சாலைகளின் நிறுவனங்கள் எந்த துறை அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வெண்டையம்பட்டியில் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்த 10 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக மாறியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவருமான ராமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா,வெண்டையம்பட்டி கிராமத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாமல் திறந்த வெளியில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் கழிவுகளை அருகில் உள்ள பொது குட்டையில் வெளியேற்றி வந்தது. இந்த மாசடைந்த நீர் அருகில் உள்ள குளம், குட்டைகளில் கலந்து விஷத்தன்மைகளாக மாறிவிட்டது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 30-க்கும் மேற்பட்ட அப்பாவி கால்நடைகள் விஷத்தன்மையாக மாறிவிட்ட நீரை அருந்தி உயிரிழந்தது.
இதைகண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் இரா.முகில் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தி அதன்மூலம் கடந்த மார்ச் 7ம் தேதி அன்று தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகள் மூலமாக ஆய்வு செய்து அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அறிக்கை வரும் வரை வெண்டையம்பட்டி தனியார் நிறுவனத்தின் இயக்கம் நிறுத்தி வைக்க வேண்டும். ஆய்வுகள் அடிப்படையில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும். நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலை புறம்போக்குகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகளை மேற்கொண்டு பொதுவெளியில் வெளியேற்றாமல் ஆய்வுக்கு பிறகு அரசின் முடிவின் அடிப்படையில்,அரசு விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்திருந்தனர். அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பிளாஸ்டிக் மறு சுழற்சி தனியார் நிறுவனம் மட்டுமல்லாது அருகில் இருக்கும் டயர் உற்பத்தி தொழிற்சாலை, மாடர்ன் ரைஸ் மில், பேப்ரிகேஷன் தொழிற்சாலைகள் என அப்பகுதியில் உள்ள ஆறு தனியார் தொழிற்சாலைகளின் நிறுவனங்கள் எந்த துறை அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தனியார் தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 10 ஏக்கர் நிலத்தை மீட்டு உள்ளனர். மேலும் பிளாஸ்டிக் மறு சுழற்சி நிறுவனத்தின் ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ததை தொடர்ந்து மற்ற தொழிற்சாலைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலை பகுதிகளை மீட்டுள்ள மாவட்ட நிர்வாகத்திற்கும், உறுதுணையாக செயல்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் குடிநீர் வடிகால் வாரியம் தொழிலாளர் நலத்துறை மற்றும் காவல்துறையினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், வெண்டையம்பட்டி கிராம மக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தொடர்ந்து இப்பகுதியில் விஷ நீர் அருந்தி இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இப்பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

