தேசிய நல்லாசிரியர் விருது; ஜூலை 9 வரை விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு- என்ன தகுதி?
National Teachers Award 2025: 2025ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சகமும் யுஜிசியும் அழைப்பு விடுத்துள்ளன.

கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசிஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விருதுகள்
இதில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது என்ற பெயரிலும், மாநில அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு முதல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, 2025ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சகமும் யுஜிசியும் அழைப்பு விடுத்துள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஜூலை 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- உயர் கல்வி நிறுவனங்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முழு நேர ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இளநிலை அல்லது முதுநிலை அளவில் பணிபுரியலாம்.
- கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள், துணை வேந்தர்கள் யாரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.
- ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பத் தகுதியானவர்கள் அல்ல.
- விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு 55 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
விருது என்ன?
விருது,
சான்றிதழ்,
ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை தேசிய நல்லாசிரியர் விருதுடன் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆசிரியர்கள் https://awards.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று, கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்திசெய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தலைவர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு, விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் டெல்லிக்கு நேரில் அழைக்கப்படுவர், செப்டம்பர் 4ஆம் தேதி ஒத்திகை நடைபெறும். அடுத்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.
இதுதொடர்பான முழு தகவல்களை https://www.ugc.gov.in/pdfnews/9972224_Letter-National-Award-to-Teachers-2025.pdf என்ற அறிவிக்கையை படித்து அறிந்துகொள்ளலாம்.






















