![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ranil Wickremesinghe: பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க...சொந்த தொகுதியில் தோற்று அதிபரானவரின் வெற்றிக் கதை!
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து பின்னர், நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தற்போது இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
![Ranil Wickremesinghe: பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க...சொந்த தொகுதியில் தோற்று அதிபரானவரின் வெற்றிக் கதை! Sri Lanka Presidential Election 2022 Result Winner Ranil Wickremesinghe Sri Lanka New President Ranil Wickremesinghe: பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க...சொந்த தொகுதியில் தோற்று அதிபரானவரின் வெற்றிக் கதை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/fd39cd7cda269977f74ead12405c2705_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு தொகுதியில் தோல்வி அடைந்து பின்னர், நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தற்போது இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலக, அந்த பதவி ரணிலுக்கு கிடைத்தது. இதற்கு பின்னரும், போராட்டம் தீவிரமடைய அதிபர் கோட்டபய ராஜபகசவும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இச்சூழலில், இடைக்கால அதிபராக பதவியேற்று தற்போது நாடாளுமன்றத்தின் மூலம் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரணில். இதையடுத்து, அவரின் அரசியல் பயணம் குறித்து காண்போம்.
பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க
73 வயதான ரணில் விக்ரமசிங்க சுமார் 45 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட கூடிய தலைவராக ரணில் திகழ்கிறார்.
வசதியான அரசியல் குடும்பத்தில் பிறந்த ரணில் விக்கிரமசிங்க தொழில் ரீதியாக வழக்கறிஞர் ஆவார். 1977 இல் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ல் ரணசிங்க பிரேமதாச அதிபராக இருந்தபோது அரசியல் அடுத்த கட்டத்திற்கு சென்றார். 1993 இல் பிரேமதாஸ் படுகொலை செய்யப்பட்டு டி.பி. விஜேதுங்க அதிபராக பதவியேற்றபோது ரணில் முதல் முறையாக பிரதமரானார்.
1994 ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் காமினி திசாநாயக்க படுகொலை செய்யப்பட்டபோது அக்கட்சியின் தலைவரானார். 2005ஆம் ஆண்டு, இலங்கை அதிபர் பதவிக்கு விக்கிரமசிங்க போட்டியிட்ட போது, மஹிந்த ராஜபக்சவிடம் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை.
2010இல், அவர் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அதிபர் பதவி தேர்தலில் ஆதரித்தார். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.
2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்ட போது, விக்கிரமசிங்க உலகளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அவருக்கும் அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு, உளவுத்துறையின் தோல்விக்குக் காரணமாக மாறி, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வரை இட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மத்திய வங்கியின் தலைவராக தனது நண்பரை ரணில் நியமித்ததாகவும் உள்நாட்டு வர்த்தக குற்றச்சாட்டில் அவர் சிக்கியபோது நண்பருக்கு ஆதரவாக செயலப்பட்டதாகவும் ரணில் மீது குற்றச்சாட்டு உள்ளது.
2018ல் பிரதமர் பதவியில் இருந்து அவரை நீக்க முயன்ற அவருக்கும் சிறிசேனாவுக்கும் இடையேயான உறவில் இது விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, மகிந்த ராஜபக்ச 52 நாட்களுக்கு பிரதமராக பதவியேற்றார். இது அரசியலைப்புக்கு எதிரான செயல் என விமர்சிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். விக்கிரமசிங்க இந்தியாவுடன் நெருக்கமாக கருதப்படுகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)