"ராகுல் காந்தி மாதிரியான சில பிராணிகள் இருக்கு" யோகி பரபர கருத்து!
ராகுல் காந்தி மாதிரியான ஒரு பிராணியால் பாஜகவுக்கு பலன் கிடைத்ததாக உ.பி. முதலமைச்சர் யோகி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி போன்ற சில பிராணிகள் இருப்பது பாஜகவுக்கு முக்கியம். இதனால் பாதை எப்போதும் தெளிவாக இருக்கிறது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரபர கருத்து தெரிவித்துள்ளார். 100 இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் மிகவும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் ஆனால் 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
யோகி என்ன பேசினார்?
உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய சமூகம் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இஸ்லாமியர்கள் பாதுகாப்பு குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரபர கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாகதான் இருப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், "100 இந்து குடும்பங்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அவர்களுக்கு அனைத்து மத பழக்கவழக்கங்களையும் பின்பற்ற சுதந்திரம் இருக்கும்.
"கவனமாக இருக்க வேண்டும்"
ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? இல்லை. வங்கதேசம் ஒரு உதாரணம். இதற்கு முன்பு, பாகிஸ்தான் ஒரு உதாரணம். ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? புகை இருந்தால் அல்லது யாராவது தாக்கப்பட்டால், நாம் தாக்கப்படுவதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். அதைத்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.
2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, உத்தரப் பிரதேசத்தில் எந்த வகுப்புவாத கலவரங்களும் நடக்கவில்லை. உத்தரபிரதேசத்தில், முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளார்கள். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், அவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
2017க்கு முன்பு உ.பி.யில் கலவரங்கள் நடந்திருந்தால், இந்து கடைகள் எரிந்திருந்தால், முஸ்லிம் கடைகளும் எரிந்தன. இந்து வீடுகள் எரிந்திருந்தால், முஸ்லிம் வீடுகளும் எரிந்தன. 2017க்குப் பிறகு, கலவரங்கள் நின்றுவிட்டன.
நான் ஒரு சாதாரண குடிமகன், உத்தரபிரதேச குடிமகன். நான் அனைவரின் மகிழ்ச்சியையும் விரும்பும் ஒரு யோகி. அனைவரின் ஆதரவையும் வளர்ச்சியையும் நான் நம்புகிறேன். சனாதன தர்மம் உலகின் மிகப் பழமையான மதம். கலாச்சாரம்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றவர்களை தங்கள் மதத்திற்கு மாற்றவில்லை. ஆனால் அதற்கு ஈடாக அவர்கள் என்ன பெற்றார்கள்? அதற்கு ஈடாக அவர்கள் என்ன பெற்றார்கள்? உலகில் எங்கும் இந்து ஆட்சியாளர்கள் தங்கள் பலத்தைப் பயன்படுத்தி மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதற்கு உதாரணம் இல்லை. இதுபோன்ற நிகழ்வுகள் இல்லை" என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சித்த அவர், "ராகுல் காந்தி போன்ற சில பிராணிகள் இருப்பது பாஜகவுக்கு முக்கியம். இதனால் பாதை எப்போதும் தெளிவாக இருக்கிறது" என்றார்.

