எழும்பூர் முதல் குழித்துறை வரை.. ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்.. மத்திய அரசு புது தகவல்
சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, உட்பட எஞ்சிய 68 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமிர்த பாரத ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புக்கு அடையாளம் காணப்பட்டு முதற்கட்டமாக 9 ரயில் நிலைய பணிகள் நிறைவடைந்திருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் முதல் குழித்துறை வரை:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக எம்பி தர்மர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "சிதம்பரம், குழித்துறை, மன்னார்குடி, போளூர், சாமல்பட்டி, ஸ்ரீரங்கம், பரங்கிமலை, திருவண்ணாமலை, விருத்தாசலம் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன" என்றார்.
சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, உட்பட எஞ்சிய 68 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்:
மொரப்பூர், பொம்மிடி, திருவாரூர் சந்திப்பு, வேலூர் கண்டோன்மென்ட், அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் புதிய கட்டடங்கள் கட்டுதல், வாகன நிறுத்துமிடங்கள், உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்துமிடங்கள், சாய்தளங்கள் போன்ற பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும், மற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வே என இரண்டு கோட்டங்களுக்கு உட்பட்டு இருப்பதாகவும், இந்த இரண்டு கோட்டங்களுக்கும் சேர்த்து 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.1571 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதையும் படிக்க: Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?





















