"ஒரு உயிர் போயிருச்சே.. இதுக்கு யார் பொறுப்பு" கொதித்து பேசிய அண்ணாமலை!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கடந்தாண்டு தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த அதே நாளில் கடலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கள்ளச்சாராய விவகாரம்:
இவர் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் விஷச் சாராய வழக்கில் ஏற்கனவே கைதான கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.
ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது என்பது, ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி.
"முதல்வர் ஒளிந்து கொள்ளக் கூடாது"
தனது துறையின் அடிப்படைப் பணிகளைக் கூட கவனிக்காத வண்ணம், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? மீண்டும் அதே பகுதியில், அதே கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு?
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.
— K.Annamalai (@annamalai_k) February 27, 2025
ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல்…
66 உயிர்களைக் கொன்று ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், மீண்டும் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால், அது காவல்துறைக்கே தெரியாமல் நடக்கிறது என்பதை எப்படி நம்ப முடியும்?
காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா? கள்ளச்சாராய விற்பனையில் கிடைக்கும் பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
இனியும் இல்லாத காரணங்களின் பின்னால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல ஒளிந்து கொள்ளாமல், தைரியமாக வந்து விளக்கமளிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.