’’இது எங்க அறிக்கையே இல்ல’’ என்னதான் நடந்தது மாநில கல்விக் கொள்கையில்? குமுறும் கல்வியாளர்கள்!
இதில் நாங்கள் பரிந்துரை செய்யாத பல அம்சங்கள் உள்ளன. தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே இல்லை. தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகள் என சொல்லப்பட்டு உள்ளது.

மாநில கல்விக் கொள்கை உருவாக்கலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், மாற்றங்கள் குறித்து கல்வியாளர்கள் வேதனையில் இருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது:
’’ஒன்றை உருவாக்க முடியவில்லை என்றால், அதை ஒத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி ஒத்துக் கொள்ளும் பட்சத்தில்தான், அதற்கான தடைகளை முறியடித்து, சாதிப்பது எப்படி? என திட்டமிட்டு செயலாற்ற முடியும்!
தமிழ்நாட்டிற்கு என மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தடபுடலாக வெளியிட்டுள்ளார். அதைக் கண்டு அந்த கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் கமிட்டியே அதிர்ந்துள்ளது.
“தமிழக அரசிடம் நாங்கள் கொடுத்த மாநில கல்விக் கொள்கை ஓராண்டு கிடப்பில் போடப்பட்டு, தற்போது வெளியானதாக அறிந்தோம். ஆனால், இது, நாங்கள் அளித்த அறிக்கையே அல்ல. இதில் நாங்கள் பரிந்துரை செய்யாத பல அம்சங்கள் உள்ளன. தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே இல்லை. தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகள் என சொல்லப்பட்டு உள்ளது.
உயர் கல்வியை தவிர்த்துவிட்டு, பள்ளிக் கல்விக்கு மட்டும் ஏன் தனியாக கல்விக் கொள்கை வெளியிட்டனர் என்றும் தெரியவில்லை. வெளியீட்டு விழாவுக்கும் எங்களை அழைக்கவில்லை” என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வடிவமைத்த கல்வியாளர்கள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆக, கல்வி குழு ஒன்றை நியமித்து, அதற்கு நிதி ஒதுக்கி வேலை வாங்கி கல்வி கொள்கை திட்டம் உருவான பிறகும், அதை வெளிட தாமதித்து, அதன் பிறகு சம்பந்தமே இல்லாமல் ஒன்று வெளியாகி உள்ளது.
என்ன காரணம்?
ஏன் இந்த சூழல்? ''கல்வி என்பது ’கன்கரண்ட் லிஸ்ட்’ எனப்படும் மத்திய – மாநில அரசு இரண்டும் சேர்ந்து முடிவு செய்யும் பட்டியலில் உள்ளதாம். அதனால், தமிழ் நாட்டுக்கு என்று தனியாக ஒன்றை நாம் உருவாக்கி செயல்படுத்தக் கூடாது என பாஜக அரசின் தரப்பில் கடும் நிர்பந்தம் தரப்பட்டு உள்ளதன் விளைவே இது'' கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படியானால், அந்த கொடும் நிர்பந்தத்தை பொதுவெளியில் அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் அதிருப்தியையாவது வெளிப்படுத்தி இருக்கலாம்.
கல்வியானது இரு அரசுக்குமான பட்டியலில் இருந்தாலும், தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை பள்ளிக் கல்வியில் இது வரை நடைமுறையில் இருந்ததுதான். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில்தான், இதில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்து பிஞ்சு குழந்தைகளின் ஆரம்ப கல்வி தொடங்கி, தங்கள் ஆதிக்க கரத்தை நீட்டிவிட்டனர்.
தேசிய கல்விக் கொள்கையை டிங்கரிங் செய்த திமுக அரசு
ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதை மறுதலித்திருக்க வேண்டிய திமுக அரசு, அதை மாற்றுப் பெயர்களில் இல்லம் தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல் நம்ம பவுண்டேஷன், மாடல் ஸ்கூல்ஸ், எமிஸ் பதிவேற்றம் எல்லாமே தேசிய கல்விக் கொள்கையை டிங்கரிங் செய்து, முலாம் பூசி அறிமுகப்படுத்தி வருவதே...!
இதுவரை இல்லாத வகையில் கடந்த ஓராண்டாக அரசுப் பள்ளிகளில் கமுக்கமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது UDISE updates என்ற நடைமுறை. இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் சகல விபரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துச் சென்று விட்டனர். இது தேசியக் கல்விக் கொள்கை வரைவில் கூறப்பட்டுள்ளபடி நாடு முழுவதும் ஒரே கல்வியாக்கும் அம்சமாகும். இதைத்தான் தமிழக அரசு மும்முரமாக செயல்படுத்தி தருகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகத்தில் ‘சனாதன தருமம் அழிவில்லாத நிலையான அறம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது எப்படி?
ஆக, வெளியில் சொல்வதொன்றும், நடைமுறை செயலாக்கத்தில் முற்றிலும் வேறொன்றாகவும் வெளிப்படுவதை எப்படி புரிந்து கொள்வது?
இரு மொழிக் கொள்கை, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து, 3,5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு ரத்து, காலநிலை மாற்றக் கல்வி போன்ற ஒரு சில வரவேற்கத்தக்க அம்சங்களைத் தவிர்த்து, மற்ற அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களே.
முக்கியமாக சனாதனக் கல்வியை மறுத்தல், கல்வித் துறையில் கார்ப்பரேட் ஊடுருவலைத் தவிர்த்தல், இந்துத்துவ சக்திகள் நுட்பமாக பள்ளிக் கல்விக்குள் ஆதிக்கம் செலுத்தி வருவதை தடுத்தல், தமிழ் வழிக் கல்விக்கான தடைகளை தகர்த்தல், கல்வி மையப்படுத்தப்பட்ட அதிகாரமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு போன்றவை இதில் கிஞ்சித்தும் இல்லை’’ என்று மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் தெரிவித்துள்ளார்.






















