Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சென்னையில், சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரும் 15-ம் தேதி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்து, போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன் முழு விவரங்களை காணலாம்.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி, அதாவது வரும் வெள்ளிக் கிழமை, சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது குறித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், தலைமைச் செயலகத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 15.08.2025 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
எங்கெங்கு போக்குவரத்து தடை.?
1. காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை, மற்றும் கொடிமரச் சாலையில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.
2. காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள், வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி, அண்ணா சாலையில் இணைந்து, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ் (NFS) சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம். அதேபோல், அண்ணா சாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கி வரும் வாகனங்கள், மேலே உள்ள அதே பாதையை பயன்படுத்தலாம்.
3. ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிஸ் கார்னர், என்.எஃப்.எஸ் சாலை, ராஜா அண்ணாமலை மன்றம். முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி, வாலாஜா சாலை நோக்கி சென்று, காமராஜர் சாலையை அடையலாம்.
பாஸ்கள் உள்ள வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் நிறுத்தங்கள்
4. சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள், காலை 8.30 மணிக்கு முன் சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்களுடன் வரும் வாகனங்கள், ராஜாஜி சாலையில் சென்று தலைமைச் செயலக நுழைவாயிலின் முன் விருந்தினர் இறங்கிய பின், வாகனமானது தலைமைச் செயலகத்திற்குள் நிறுத்த அனுமதிக்கப்படும்.
காலை 8.30 மணிக்குப் பிறகு வரும் அழைப்பாளர் வாகனங்கள், உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி பாயிண்ட் ராஜா அண்ணாமலை மன்றம், என்.எய்.எஸ் சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டு, தலைமைச் செயலக வெளிவாயில் முன் விருந்தினர் இறங்கிய பின், பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.
5. காமராஜர் சாலையில் வரும் அழைப்பாளர்கள் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள் போர் நினைவுச் சின்னம், கொடி மரச்சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி சாலை, NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பிஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலகத்தின் வெளிப்புற வாயிலை அடைய வேண்டும். அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சிலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வழியாகச் சென்று தலைலமச் செயலக வெளிவாயிலில் இறங்க வேண்டும். நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட அனைத்து வாகனங்களும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





















