![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lottery: ரூ.250 கூட பணம் இல்லாத சூழல்.. இப்போ ரூ.10 கோடி! 11 பெண்கள் ஒன்றாக சேர்ந்ததால் அடித்தது ஜாக்பாட்
250 ரூபாய் பணம் இல்லாத சூழலில், 11 பெண்கள் ஒன்று சேர்ந்து லாட்டரியில் டிக்கெட் வாங்கியுள்ளனர்.
![Lottery: ரூ.250 கூட பணம் இல்லாத சூழல்.. இப்போ ரூ.10 கோடி! 11 பெண்கள் ஒன்றாக சேர்ந்ததால் அடித்தது ஜாக்பாட் Kerala lottery women pool money to buy ticket worth rs 250 win rs 10 crore in bumper prize Lottery: ரூ.250 கூட பணம் இல்லாத சூழல்.. இப்போ ரூ.10 கோடி! 11 பெண்கள் ஒன்றாக சேர்ந்ததால் அடித்தது ஜாக்பாட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/28/17dab3274063b6bda41372e5a2f9943d1690536046635729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லாட்டரியில் பணம் வெல்வது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. தமிழ்நாட்டில், லாட்டரி தடை செய்யப்பட்டாலும், அண்டை மாநிலமான கேரளாவில் அது தொடர்ந்து விற்கப்படுகிறது. லாட்டரியில் பணம் வென்று வாழ்க்கையே தலைகீழாக மாறிய கதை எல்லாம் கேரளாவில் நடந்துள்ளது. அதுபோன்ற ஒன்று தான் தற்போதும் கேரளாவில் நடந்துள்ளது.
11 பெண்கள் ஒன்று சேர்ந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்:
250 ரூபாய் பணம் இல்லாத சூழலில், 11 பெண்கள் ஒன்று சேர்ந்து லாட்டரியில் டிக்கெட் வாங்கியுள்ளனர். இந்த நிலையில், இவர்கள் 10 கோடி ரூபாய் பணம் வென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹரிதா கர்ம சேனா அமைப்பில் பணியாற்றி வரும் இவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர்.
மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று குப்பைகளை சேகரித்து, அதை அகற்றுவதே இந்த பெண்களின் பணியாக இருந்திருக்கிறது. இதில், வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தியுள்ளனர். இதில், ஒன்பது பேர் 25 ரூபாய் பணமும் இரண்டு பேர் தலா 12.5 ரூபாய் பணத்தையும் சேர்த்து லாட்டரியில் டிக்கெட் வாங்கினர்.
லாட்டரியில் 10 கோடி ரூபாய் பணத்தை வென்ற போதிலும் குப்பைகளை அள்ளும் தங்களின் பணியை தொடர்வோம் என பெண்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் ஒன்று சேர்ந்ததால் மட்டுமே லாட்டரியை வெல்ல முடிந்தது என்றும் தொடர்ந்து ஒன்றாகவே பணியாற்றுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
10 கோடி ரூபாய் லாட்டரி வென்ற பெண்கள்:
ஹரிதா கர்ம சேனா அமைப்பை சேர்ந்த பி. பார்வதி, கே. லீலா, எம்.பி. ராதா, எம். ஷீஜா, கே. சந்திரிகா, இ. பிந்து, கார்த்தியாயினி, கே. ஷோபா, சி. பேபி, சி. குட்டிமாலு மற்றும் பி. லட்சுமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து லாட்டரியில் வென்றுள்ளனர்.
10 கோடி ரூபாய் பணத்தை வென்றது குறித்து பார்வதி கூறுகையில், "அனைவரும் பணத்தை புரட்டி ஒன்று சேர்ந்து வாங்கிய நான்காவது டிக்கெட் என்பதால் எந்த நம்பிக்கையும் இல்லை. மேலும், வென்ற டிக்கெட்டை பாலக்காட்டில் உள்ள ஒரு ஏஜென்சி விற்றுள்ளதாக கேள்விப்பட்டபோது, இது மற்றொரு நஷ்டம் என்று நாங்கள் நினைத்தோம். இன்று மதியம் நான் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, எங்கள் டிக்கெட் பரிசை வென்றதாக ஒரு நபர் போன் செய்து சொன்னார்" என்றார்.
லாட்டரியில் வென்ற பணத்தின் மூலம் வீடு கட்டப்போவதாகவும் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக செலவழிக்க போவதாகவும் கடனை அடைக்க போவதாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பேபியிடமும் குட்டிமாளுவிடமும் 25 ரூபாய் பணம் இல்லாததால் தலா 12.5 ரூபாயை சேர்த்து, தங்களின் பங்கை வழங்கியுள்ளனர். இந்த பெண்களில் பலர் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். மேலும் சிலருக்கு பேருந்தில் செல்ல பணம் இல்லாததால் வீட்டிலிருந்து நகராட்சிக்கு நடந்து செல்கிறார்கள்.
வெற்றி பெற்ற டிக்கெட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரப்பனங்காடி கிளையில் பெண்கள் வழங்கியுள்ளனர். இது குறித்து பரப்பனங்காடி நகராட்சித் தலைவர் உஸ்மான் கூறுகையில், "பெண்கள் வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்பட்டாலும், நேர்மையாக பணியில் ஈடுபட்டதால் தகுதியான அணிக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)