"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களை ஆதரித்து பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விளம்பரம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க டிஜிஜிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடங்கியுள்ள நிலையில், வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் (டிஜிஜிஐ) தீவிரப்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கேமிங் துறையில் உள்நாட்டை தவிர, வெளிநாட்டு ஆபரேட்டர்களும் உள்ளன. ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ‘ஆன்லைன் கேமிங்’க்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
வரி ஏய்ப்பில் ஈடுபடும் கேமிங் நிறுவனங்கள்:
ஆன்லைன் கேமிங்/பந்தயம்/சூதாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள சுமார் 700 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பின் கீழ் உள்ளன. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யத் தவறியதன் மூலமும், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைப்பதன் மூலமும், வரி செலுத்துவதை தவிர்ப்பதன் மூலமும் ஜிஎஸ்டியை ஏய்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை, வரி செலுத்தாத வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின், 357 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் இணையதளங்கள், மிண்ணனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன், ஐடி சட்டம், 2000-ன் பிரிவு 69ன் கீழ் முடக்கப்பட்டுள்ளது.
சில சட்டவிரோத கேமிங் தளங்களுக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கையில், பங்கேற்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை டிஜிஜிஐ குறிவைத்து முடக்கியது. இந்தியாவிற்கு வெளியில் இருந்து ஆன்லைன் கேமிங் தளங்களை இயக்கி வரும் சில இந்தியர்களுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
விளம்பரம் செய்யும் பிரபலங்கள்:
இந்த நபர்கள் சத்குரு ஆன்லைன் மனி கேமிங் பிளாட்ஃபார்ம், மகாகால் ஆன்லைன் மனி கேமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் அபி247 ஆன்லைன் மனி கேமிங் பிளாட்ஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் கேமிங்கை எளிதாக்குகின்றனர்.
இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க தனிநபர் வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த தளங்களுடன் இணைக்கப்பட்ட 166 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற நபர்களுக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நேர்மையற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய இணைய முகவரிகளை உருவாக்குவதன் மூலம் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கின்றன. இந்த நிறுவனங்கள் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த இத்தகைய வங்கிக் கணக்குகள் மூலம் செயல்படுவதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்தக் கணக்குகள் மூலம் சேகரிக்கப்படும் பணம், தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தாக இருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை விட்டுச் செல்கின்றன.
யூடியூப், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இந்த தளங்களை ஆதரித்து விளம்பரம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் தளங்களில் ஈடுபட வேண்டாம் என டிஜிஜிஐ அறிவுறுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

