CM Stalin: போடு வெடிய - சென்னை சங்கமம், கிராமிய கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: சென்னை சங்கமம் ( Chennai Sangamam )நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

CM Stalin: சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள். சென்னையில் உள்ள 18 இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒருநாள் ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு:
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு, கிராமிய கலைஞர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலைநிகழ்ச்சி விவரங்கள்:
இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம்,பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் கனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
உணவுத்திருவிழா:
சென்னை சங்கமம் விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு ”சங்கமம் - நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன” என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

