அனுமதி இல்லாமல் உணவு வழங்கினால் ரூ.1000 அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் உணவு வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
பழனி முருகன் கோவில்:
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு
இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடக்கவுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக செம்பட்டி, நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் நடந்து வரும் பக்தர்களுக்காக ஏராளமானோர் உணவு சமைத்து அன்னதானம் வழங்குகின்றனர். இதுபோன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பாதயாத்திரை பக்தர்களுக்கு அறிவுரை
இதன்படி, பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட பின்பு சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.பக்தர்களுக்கு கண்டிப்பாக அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கக் கூடாது.அன்னதானம் வழங்க பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது. இதனை மீறுபவர்கள் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், இதனை கண்காணிக்க சுழற்சி முறையில் உணவுத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

