By: கே.ஷண்முகசுந்தரம் | Updated at : 30 Mar 2024 02:48 PM (IST)
உலக இட்லி தினம்
குழந்தை முதல் முதியவர் வரை என வயது வித்தியாசமின்றி அனைவராலும் பரிந்துரைக்கப்படும் உணவு எது என்றால் இட்லி என்று உடனடியாக பதில் தந்துவிடலாம். அந்த அளவுக்கு எளிதில் ஜீரணமும் எந்தத் தீங்கும் விளைவிக்காத ஓர் உணவு இட்லி என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
அத்தகைய பெருமைமிகு நம்ம வூரு இட்லிக்கு, கிட்டத்தட்ட இன்று பிறந்ததினம் என்றால் மிகையில்லை. ஆம், வாசர்களே இன்று இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் மார்ச் 30-ம் தேதி, இட்லி தினமாக(World Idli Day) கொண்டாடப்படுகிறது. ஏனெனில், வயது வித்தியாசமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் உணவு, இட்லி என்பதால், இந்த தினம் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு சரியான காரணங்கள் ஏதுமில்லை என்பதே உண்மை. அது போல் இதற்கு அரசு அமைப்புகளின் அங்கீகாரமும் இல்லை. எது எப்படியோ, தமிழகத்தின் “நம்பர் ஒன்” உணவான இட்லிக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய கதையை கேட்டால், தமிழக உணவுகளில் இட்லிதான் சூப்பர்ஸ்டார் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வோம். அப்படிப்பட்ட இட்லியின் கதையை தற்போது பார்ப்போம்.
தற்போது உலகம் முழுவதும் தமிழகத்தின் உணவாகத்தான் இட்லி பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு வரலாற்றுச்சான்றுகள் ஏதுமில்லை. ஆனால், அன்றைய அகண்ட தமிழகத்தில், அதாவது இன்றைய கர்நாடகத்தின் மத்தியப் பகுதியில் இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள். அதுபோல், சிலர், பிற்கால சோழர் காலத்தில், இந்தோனேஷிய பகுதியில் இருந்து இந்த உணவு, தமிழகம் வந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், இவை எவற்றிலும், உறுதியாக இங்கிருந்துதான் வந்தது என்றோ, இங்குதான் பிறந்ததோ என்றோ சொல்வதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. ஆனால், தமிழகத்தின் இந்த உணவ குறித்த சொல்லாடல், 17-ம் நூற்றாண்டுகளில் இருந்தே காணப்படுவதை பல்வேறு நூல்களில் காண முடிவதாகச் சொல்பவர்களும் உண்டு.
இட்லி என்பது முதலில், இட்டவி என்றே தமிழகத்தில் அழைக்கப்பட்டதாம். மாவு இட்டு, அவிக்கப்படுவது என்பதை இட்டவி என்றழைத்தனர். ஆனால், காலப்போக்கில் அச் சொல் மருவி, இட்லி என்றானதாக உணவு வரலாற்று ஆய்வாளர்கள் பலரின் கூற்று. தற்போது அனைவராலும் விரும்பப்படும், வாங்கப்படும், செய்யப்படும் உணவாக இருக்கும் இட்லிக்கு எத்தனையோ பின்னணிகள் இருந்தாலும், பொதுவாக, தற்போது உலகம் முழுவதும் இது ஒரு தென்னிந்திய உணவு, குறிப்பாக, தமிழகத்தின் உணவு என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று சாதாரணமானவர் முதல் பணக்காரர் வரை விரும்பிச் சாப்பிடும் இட்லி, ஒரு காலத்தில், செல்வந்தர்கள், அதாவது ராஜாக்களுக்கு மட்டுமே பரிமாறப்படும் அளவுக்கு மிகவும் விலை உயர்ந்த உணவாக இருந்ததாம்.
முதலில் இட்லி உணவு அவிக்கப்படுவதற்கு பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. அதேபோல், இந்த மாவு உருவாக்குவதும் (அரிசியும் உளுந்தும் கலந்து) அப்போது மிக ரகசியமாக ராஜா வீட்டு சமையல்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்தி வந்தனர். அதேபோல், அப்போது பித்தளை, வெண்கலம் பாத்திரங்கள் ராஜாக்களின் அரண்மனைகளில் மட்டும்தான் இருக்கும். மற்றவர்களின் வீடுகளின் மண் பானைகள்தான் இருந்தனவாம். ராஜா குடும்பத்தினருக்கும், அவரது விருந்தினர்களுக்கும் மட்டுமே இந்த இட்லி பரிமாறப்பட்டதால், மிகவும் விலை உயர்ந்த உணவுப் பொருளாக அக் காலத்தில் பார்க்கப்பட்டதாம். ஆனால், இட்லி மாவு தயாரிப்பது கொஞ்சம், கொஞ்சமாக ராஜாக்களின் அரண்மனைகளில் இருந்து செல்வந்தர்களின் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்தது.
தமிழகத்தில் அலுமினிய பாத்திரங்கள் அறிமுகம் ஆகும் வரை, இட்லி அரிய, விலை உயர்ந்த உணவாகவே பார்க்கப்பட்டது. பிறகு அலுமினிய பாத்திரங்கள் வந்தப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து இடங்களிலும் பரவியது. அப்போதும்கூட, இட்லி என்பது சில பண்டிகை நாட்களில் மட்டுமே சமைக்கப்படும் உணவாக, பல வீடுகளில் கடந்த நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் பெறும் வரை இருந்து வந்தது. அதன்பின், இட்லி எல்லா இடத்திலும் பரவினாலும், அதனுடைய பரவலான வீச்சு என்பது 90 களில்தான், வெகுவாக இருந்தது. இட்லி சாம்பார், இட்லி வடை ஆகியவை தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தமிழகத்தின் உணவாக அடையாளம் காணப்பட்டது. அதன்பின், இட்லியின் ஒன்றுவிட்ட சகோதரனான தோசைக்கும் அந்தப்பெயர் கிடைத்தது வேறு விடயம். ஆனால், விலை உயர்ந்த இட்லி, விலை குறைவாக அனைத்து இடங்களிலும் கிடைக்க ஆரம்பித்தது. தமிழகத்தின் எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும், இட்லி கிடைக்கும் என்ற நிலை உருவானது.
உடலுக்குச் சிறந்த பலன் தரும் பல இயற்கை, செயற்கை உணவுகள் இருந்தாலும், மருத்துவர்களின் முதல் “சாய்ஸ்” இட்லிதான். அதைதான், நோயாளிகள் உட்பட அனைவருக்கும் முதலில் பரிந்துரைப்பார்கள். காரணம், மசாலா போன்ற கலப்புகள் இல்லாத, பெரிய சிக்கல்கள் தராத உணவு, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதாலும், முதியவர் முதல் 5வயது குழந்தை வரை அனைவராலும் எளிதில் உண்ணக்கூடிய ஒன்று என்பதாலும், மருத்துவர்களின் முதல் பரிந்துரை எப்போதுமே இட்லி என்பதில் ஐயமில்லை.
இட்லி பிறந்த பிறகு, தோசை, ஊத்தப்பம், ஆப்பம் என பல்வேறு ஒன்றுவிட்ட சகோதரர்கள் வந்துவிட்டனர். அதேபோல், இட்லியிலும் சாம்பார் இட்லி, பொடி இட்லி, புதினா இட்லி, காஞ்சிபுரம் இட்லி என அவரவர் வசதிகேற்ப புதுப்புது இட்லிகள் வந்துவிட்டன. இவையெல்லாம் மிஞ்சும் வகையில், 1100 வகையான இட்லி வகைகள் எல்லாம் தயாரிக்கப்பட்டு, சாதனையெல்லாம் படைக்கப்பட்டன. எது எப்படி வந்தாலும், அடிப்படையிலான இட்லி மட்டும், மாறாமல் அப்படியே இருந்தது என்பதுதான் சுவாரஸ்யம்.
இட்லிக்கு தொட்டுக் கொள்ள சர்க்கரை, மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி முதற்கொண்டு பல்வேறு வகையான சட்னிகள், சாம்பார் என பல ஜோடிகள் இருக்கின்றன. எதுவும் தொட்டுக் கொள்ளாமலேயும் இட்லியை சாப்பிடலாம். ஆனால், ஜோடியாகச் சாப்பிடும் போதுதான் இட்லிக்கு தனி மதிப்பு. அதுவும் இட்லி சாம்பாரும், இட்லி தேங்காய் சட்னியும் சர்வதேச அளவில் பிரபலம் என்றால் மிகையில்லை. “ரைஸ் கேக்” என விரும்பி கேட்டு வாங்கிச் சாப்பிடும் அளவிற்கு, வெளிநாட்டவர்களிடமும் இட்லி மிகப் பிரபலம்.
தமிழகத்திற்கு உரிய எத்தனை உணவு வகைகள் இருந்தாலும், ஒரு காலத்தில் ராஜாக்களின் உணவாக இருந்து, தற்போது “சமூக நீதியை” கடைப்பிடிக்கும் பிரபல உணவாக இருப்பது இட்லி மட்டுமே. அந்த அளவுக்கு அனைவராலும் உண்ணக்கூடிய, வாங்கக்கூடிய உணவாக இருக்கிறது இட்லி. தமிழகம் மட்டுமல்ல, சர்வதேசங்களிலும் தமிழ்நாட்டு உணவுகளின் முதல் முகவரியாக இருக்கும் இட்லி, தமிழக உணவுகளின் சூப்பர்ஸ்டார் என்றால் மிகையில்லை என்றே கருதுகிறேன்.
அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்
Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!
Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்