கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்... விரைவில் ஐபிஎல் போட்டி... ரசிகர்கள் மகிழ்ச்சி
கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் 20.72 ஏக்கர் இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.
கிரிக்கெட் மைதானம் எங்கு?
ஒண்டிப்புதூர், பாரதியார் பல்கலை அருகே உள்ள இடம், கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு இடம், ஒண்டிப்புதூரில் திறந்த வெளி சிறைசாலை இடம் என நான்கு இடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டது. இறுதியாக ஒண்டிப்புதூரில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் 20.72 ஏக்கர் இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதை தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து இறுதி செய்தார். இதன்பின் சிறைத்துறைக்கு சொந்தமான இடம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று:
மைதானத்துக்கு தடையில்லா சான்று கேட்டு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மைதானத்தின் 3 கட்டிட மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்த வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் சமர்ப்பிக்கப்பட்டு, எந்த மாதிரியான வடிவமைப்பு என்பதை இறுதி செய்ய உள்ளார்.
மக்கள் கருத்து தெரிவிக்கலாம்:
இதற்கிடையே கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கியூஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஐபிஎல் போட்டிகள்?
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்தால் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டாவது ஹோம் கிரவுண்டாக கோவை கிரிக்கெட் மைதானம் இருக்கும் என்றும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டி கோவை மைதானத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி:
சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு சென்று பார்க்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதோர் விரைவில் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் ஐபிஎல் போட்டிகளை கோவையில் பார்க்க முடியும். அரசு கிரிக்கெட் மைதானத்தை கட்டும் பணியை விரைந்து முடித்தால் இரண்டாம் கட்ட நகரங்களில் இருந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிரிக்கெட் மைதானம் அமைப்பதை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

