சேலம்: கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் 291 நாட்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தப்பட்டிருந்த தேஜ்மண்டலின் உடலை அவருடைய கணவர் பெற்றுக்கொண்டார்.

சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டி பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நேபாளத்தை சேர்ந்த இளம் பெண் தேஜ் மண்டல் உடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு அரை நிர்வாணம் ஆக கண்டெடுக்கப்பட்டது. மேலும் தேஜ் மண்டல் பாலியல் தொழிலில் ஏற்கனவே பிடிபட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்ததாகவும், இவர் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பழைய வழக்குகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு தேஜ் மண்டலுடன் தொடர்பில் இருந்த நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் தொடர் விசாரணையின் முடிவில் தேஜ் மண்டலின் பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த இளைஞர் லிப்லு, அவரது காதலி லிஸி ஆகிய இருவரும் சேர்ந்து பணத்திற்காக தேஜ் மண்டலை கொலை செய்து, சூட்கேஸ் ஒன்றில் உடலை அடைத்து வைத்துவிட்டு தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தேஜ் மண்டலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேஜ் மண்டலை கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கொலையாளி என கூறப்படும் நேபாளத்தை சேர்ந்த இளைஞர் லிப்லு, அவரது காதலி லிஸி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொலையுண்ட தேஜ் மண்டல் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்பதால், இந்திய தூதரகம் மூலம் அவரது உடலை நேபாளத்தில் வசிக்கும் அவரது கணவர் முகமது ராக்கியிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தேஜ் மண்டலின் கணவரான முகமது ராக்கி, தன்னிடம் பணம் இல்லை, மேலும் பாஸ்போர்ட் எடுக்க வசதி இல்லை என தெரிவித்ததின் பேரில் சேலம் மாநகர காவல் துறையினர், தேஜ் மண்டல் சேலத்தில் வாடகை வீட்டில் தங்கிருந்த உரிமையாளரிடமிருந்து தேஜ் மண்டல் வழங்கி இருந்த அட்வான்ஸ் தொகையை பெற்று முகமது ராக்கிக்கு அனுப்பி வைத்தனர். அதனை அடுத்து முகமது ராக்கி சேலம் வந்தார். பின்னர் அஸ்தம்பட்டி காவல்துறையினர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முகமது ராக்கியிடம் தேஜ் மண்டலின் உடல் அடையாளம் காட்டப்பட்டது. இதனை அடுத்து அவரது 291 நாட்களுக்கு பிறகு உடலை கணவர் முகமது ராக்கிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து இஸ்லாமிய முறைப்படி சேலத்தில் தேஜ் மண்டலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

