உயர் கல்வியில் சந்தேகமா? எந்த கல்லூரியில் என்ன படிப்பில் சேரலாம்? இனி ஆட்சியர் அலுவலகத்திலேயே தீர்வு!
11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்டத் தலைவர் மேலும் கூறி உள்ளதாவது:
’’தமிழ்நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, 2022ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை கூட்டு முயற்சியுடன் 'நான் முதல்வன் திட்டம்' தொடங்கப்பட்டது.
யார் யாருக்கு என்னென்ன உதவிகள்?
உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின் மூலம், பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், கல்லூரி கட்டணம் (செலுத்த இயலாதவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோர்கள் விருப்பமின்மையால் மற்றும் சமூக காரணங்களால் உயர் கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், திருமணம் போன்ற காரணங்களால் உயர் கல்வி தொடர இயலாத மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
எப்போது இயங்கும்?
மாவட்ட கட்டுப்பாட்டு அறை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 6வது தளத்தில் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும். மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் வழியாக ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
என்னென்ன ஆலோசனைகள்?
11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர் கல்வி சார்ந்த உதவிகள், ஆலோசனைகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ காலிப் பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் என, அனைத்து தகவல்களும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழங்கப்படும். மேலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும்’’.
இவ்வாறு சென்னை ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















