ரூ.100 கோடி மதிப்பு சிலைகள் திருட்டு... பரபரப்பை கிளப்பிய மகாலிங்க சுவாமி
500 ஆண்டுகளுக்கு மேலான 10க்கும் அதிகமான பாரம்பரியமிக்க சிலைகள், விக்கிரகங்கள், விலை உயர்ந்த மரகதங்கள் படிகங்கள், நான் இல்லாத நேரத்தில் எடுத்து சென்று விட்டனர்.

தஞ்சாவூர்: சூரியனார்கோவில் ஆதீனத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் திருட்டு போகி விட்டது. மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி மகாலிங்கசுவாமி தஞ்சாவூர் எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், 28வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்தார். இந்நிலையில், 54 வயதான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பெங்களூரை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47), என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, சூரியனார்கோவில் ஆதீன ஸ்ரீ கார்யங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள், 'ஆதீனமாக பதவி வகிக்கும் தகுதியை மகாலிங்க சுவாமி இழந்து விட்டதாக தெரிவித்து அறிவித்தார். மேலும், கடந்த ஆண்டு நவ.12ம் தேதி, மகாலிங்கசுவாமி ஆதீன மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நேரத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது, சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம், மகாலிங்கசுவாமி ஒப்படைத்தார். மேலும், ''முழு பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை. வேறு இடத்தில் போய் ஓய்வெடுக்கப் போகிறேன் என கூறி சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு மகாலிங்கசுவாமி நேற்று முன்தினம் தஞ்சாவூர் வந்தார். பின்னர் அவர் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராமிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், திருமங்கலகுடியை சேர்ந்த பாபு என்கிற ரத்தினவேல், சூரியனார்கோவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் சில சமூக விரோதிகள், சிலரின் துாண்டுதலின் பேரில், என் மீது போலியாக விமர்சனம் செய்து மானபங்கப்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, ஆதீனத்தை விட்டு வலுக்கட்டாயமாக துன்புறுத்தி அனுப்பி விட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு இது ஏன் என்று பதற்றத்தில் புரியவில்லை. தற்பொழுது தான் ஊர் மக்கள் கூறி, அதற்கான விடை கிடைத்துள்ளது.
மேலும், 500 ஆண்டுகளுக்கு மேலான 10க்கும் அதிகமான பாரம்பரியமிக்க சிலைகள், விக்கிரகங்கள், விலை உயர்ந்த மரகதங்கள் படிகங்கள், நான் இல்லாத நேரத்தில் எடுத்து சென்று விட்டனர். எனவே, இந்த புகாரை தீர விசாரித்து, தற்போதுள்ள சிலைகளை கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும்.
மேலும், என்னுடைய உயிருக்கும், சூரியனார்கோயில் ஆதீன சொத்திற்கும் சமூக விரோதிகளால், ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகாலிங்சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது: நான் வடமாநில யாத்திரை சென்று இருந்தேன். இப்போதுதான் திரும்பி வந்தேன். ஆத்மார்த்த சுவாமிகள் படிக லிங்கம், சுமார் ஒரு அடி உயரம் கொண்ட நந்தியம் பெருமான், நடராஜர் – சிவகாமசுந்தரி, முருகன் ஐம்பொன் சிலை என 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் திருட்டு போய் உள்ளது. இதுகுறித்து நான் எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளேன். நான் மீண்டும் ஆதீனமாக தொடர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

