முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம்
இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அதே நிலையில்தான் இன்னும் இருக்கிறதா? அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், தேனி மாவட்டத்தில் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வரையில் வருடந்தோறும் செய்யப்படும் இரண்டு போக நெல் விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்து வரும் முல்லைப் பெரியாறு அணையில், 142 அடியிலிருந்து 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் ஏற்கனவே 4 முறை 142 அடி நீர் மட்டம் வரை நீர் தேக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு 136 அடி வரை மட்டுமே நீர் தேக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய நிலையில் முல்லை பெரியாறு அணையில் 136 அடியிலிருந்து 142 அடி வரைக்கும் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் இதுவரை நான்கு முறை 142 அடி வரையில் நீர்மட்டத்தை உயர்த்திய நிலையில், கேரள அரசு தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பல்வேறு முரண்பாடுகளை தற்போது வரை கடைபிடித்து வருகிறது.
கேரள அரசும் , கேரள அரசை சேர்ந்த தனிநபர்களும் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி முன்பு நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்து வந்தனர். அந்த மனுக்களில் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும், வேறு அணையை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கேரள அரசு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவின் தன்மைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது. அத்துடன் மேற்பார்வை குழுவை மாற்றியமைக்க வேண்டும், மேற்பார்வை குழுவின் தலைவரை மாற்ற வேண்டும், அணையின் நீர் மட்டத்தை நீதிபதிகளே குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கேரள அரசு முன்வைத்தது.
இந்த சூழலில் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு சா்ச்சைக்குரிய பிரச்னையாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த அணையின் கண்காணிப்புக் குழு கலைக்கப்பட்டு, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அணைப் பாதுகாப்பு - 2021 சட்டத்தின்படி, 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையில் பரமாரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை இரு தரப்பினரிடமும் முன்வைத்தனர்.
“இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அதே நிலையில்தான் இன்னும் இருக்கிறதா? அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அந்த தீர்ப்பில் எந்த பிரச்னையும் இல்லை, அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும்” எனத் தெரிவித்தனர். மேலும் இரு தரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டிருந்தால் எந்த தீர்வும் எட்ட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

