![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Himachal CM: இமாச்சல பிரதேச புதிய முதலமைச்சராக சுக்விந்தர்சிங் இன்று பதவியேற்பு..!
இமாச்சல பிரேதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.
![Himachal CM: இமாச்சல பிரதேச புதிய முதலமைச்சராக சுக்விந்தர்சிங் இன்று பதவியேற்பு..! Himachal Pradesh state CM sworn in as Himachal Pradesh Cheif Minister today Himachal CM: இமாச்சல பிரதேச புதிய முதலமைச்சராக சுக்விந்தர்சிங் இன்று பதவியேற்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/11/135c65a9b3ac07c950b7df231bc0a8531670728254323571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Himachal CM : இமாச்சல பிரேதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கும், துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரியும் இன்று பதவியேற்க உள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், 40 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியை கைப்பற்றியது.
பதவியேற்பு
இதையடுத்து, சத்தீஷ்கர் முதலமைச்சரும், இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் கண்காணிப்பாளருமான பூபேஷ் பாகல் தலைமையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், கடந்தமுறை சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக இருந்த சுக்விந்தர் சிங் சுக்குவை இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் சிம்ளாவில் எளிமையான முறையில், சுக்விந்தர் சிங்சுக்கு இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கபடுகிறார். அதோடு, முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். முதல்வர் பதவியை அடைவதற்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் தலையீடு காரணமாக இந்த பிரச்சனை சுமூக முடிவுக்கு வந்தது.
யார் இந்த சுக்விந்தர் சிங்:
தேர்தலின் போது பரப்புரை குழு தலைவராக செயல்பட்ட சுக்விந்தர் சிங் சுக்கு, ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நாடான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இமாச்சலப் பிரதேச காங்கிரஸின் முன்னாள் தலைவரான சுக்கு, நான்கு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடான் தொகுதியில் இருந்து மட்டும் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். மேலும், கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். வழக்கறிஞரான அவர், காங்கிரஸ் கட்சியின் மாணவரணியான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மூலம் அரசியலில் குதித்தார்.
இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரபத்ர சிங்குடன் அவர் சுமூகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மூத்த தலைவரான வீரபத்ர சிங், ஆறு முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். இமாச்சல் அரசியலை பொறுத்தவரை, 25 ஆண்டு கால மாநில அரசியலை பா.ஜ.க.வின் பிரேம்குமார் துமாலும், காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங்கும்தான் ஆதிக்கம் செலுத்தினர். வீரபத்ர சிங் உயிரிழந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி அவரின் மனைவி பிரதிபா சிங்குக்கு சென்றது.
அரசியல் வாழ்க்கை:
சுக்குவை பொறுத்தவரை, மன்னர் குடும்பத்தில் பிறந்த வீரபத்ர சிங் போல் அல்லாமல் சமூக ஆர்வலராக பொது வாழ்க்கையை தொடங்கினார். இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் படித்த அவர், 1980களில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். அவர் சிம்லாவில் இரண்டு முறை முனிசிபல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் 2008 இல் மாநில காங்கிரஸின் செயலாளராக ஆனார். பின்னர், மாநில தலைவர் பதவி சுக்விந்தர் சிங் சுக்குவிற்கு வழங்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)