போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள் - அரசுக்கு கோரிக்கை வைத்த கமல்ஹாசன்..!
சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல - கமல்ஹாசன்
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதி மக்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பட்டா வழங்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல. அங்கு காலம் காலமாக வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் முழு விவரம்:
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடம் சதுப்பு நிலப் பகுதி என்பதால் இதனை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அங்குள்ள வீடுகளை அகற்றும்படி வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அங்கு வசித்து வந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2800 வீடுகளை இடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். கடைசி நாளான கடந்த 10ஆம் தேதி நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்க வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிந்து அப்பகுதி மக்கள் அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு தினத்தன்றும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதிக்கு சென்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அந்தப் பகுதி மக்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு பட்டா வழங்க வெண்டும் கமல்ஹாசன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல. அங்கு காலம் காலமாக வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 27, 2022
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் வசிக்கும் பகுதியை நத்தமாக வகை மாற்றம் செய்யப்பட்டு அரசாணை நிலம் எண் 43/2015 ன் கீழ் பெத்தேல் நகருக்கு பட்டா வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கஜலட்சுமி, ஆய்வு செய்து பட்டா வழங்கலாம் என்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலம் மேய்க்கால் வகையை சார்ந்தது என வருவாய் துறை, வனத்துறை உறுதிபடுத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இருந்தும் தற்போது இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று வருவாய்த் துறை நோட்டீஸ் கொடுப்பது ஏற்புடையதல்ல என கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்