செங்கிப்பட்டி அருகே சிப்காட்: 30 ஆயிரம் பேருக்கு வேலை - உதயநிதி சொன்ன முக்கியத் தகவல்
இந்தியாவில் கல்வி, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, மகளிர் பாதுகாப்பு, மகளிர் முன்னேற்றம் என 13 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது
![செங்கிப்பட்டி அருகே சிப்காட்: 30 ஆயிரம் பேருக்கு வேலை - உதயநிதி சொன்ன முக்கியத் தகவல் 30,000 people will get employment through Sengipatti Chipkat: Deputy Chief Minister Udayanidhi Stalin assured செங்கிப்பட்டி அருகே சிப்காட்: 30 ஆயிரம் பேருக்கு வேலை - உதயநிதி சொன்ன முக்கியத் தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/07/0a99171ae0e73bb657e66ff2cd27c1941730984102090733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே 172 ஏக்கரில் சிப்காட் முதல் கட்டப் பணி தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நேற்று முடிவுற்ற கட்டடப் பணிகள் திறப்பு விழா, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடந்தது. இதி்ல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கடந்த மூன்றரை ஆண்டுகளாக மகளிருக்காக கட்டணமில்லா விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றவற்றை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் சிப்காட் என்கிற முதல் தொழில் பூங்கா செங்கிப்பட்டி அருகே 172 ஏக்கரில் முதல் கட்டப் பணி தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வசதி கிடைக்கும் .
டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சியைப் பரவலாக்குவதற்காக தமிழக முதல்வர் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இதில், முதல் கட்டமாக சென்னைக்கு அடுத்து தஞ்சாவூரில் டைடல் நியோ பூங்கா தொடங்கப்பட்டதன் மூலம் ஏறத்தாழ 600 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசுக்கு பல்வேறு திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இந்தியாவில் கல்வி, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, மகளிர் பாதுகாப்பு, மகளிர் முன்னேற்றம் என 13 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது என மத்திய அரசின் நிதி ஆயோக் பட்டியல் தெரிவிக்கிறது. இதேபோல, தொழில் துறையிலும் நம்முடைய அரசு முதலிடத்தில் இருக்கிறது. இ்வ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 154 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 68 கோடி வங்கிக் கடனுதவி, 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், அமைச்சர்கள் கோவி.செழியன், டிஆர்பி.ராஜா, எம்.பி,. முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டிகேஜி. நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)