விழுப்புரம் ரயில் நிலையத்தில் என்ன நடக்கிறது ? திடீரென ஆய்வு செய்த கூடுதல் மேலாளர்; குவிக்கப்பட்ட ஊழியர்கள்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகளில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமாக விழுப்புரம் ரெயில் நிலையம் விளங்கி வருகிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் விழுப்புரம் ரெயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இதுதவிர டெல்லி, ஹவுரா, மும்பை, திருப்பதி, மங்களூரு, மேற்கு வங்காள மாநிலம் புருலியா, காரக்பூர், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் விழுப்புரம் வழியாக ரெயில் போக்குவரத்து உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் விழுப்புரம் ரயில் நிலையம் எந்நேரமும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக இயங்கும். அதுபோல் நிலக்கரி, நெல் மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், அரிசி மூட்டைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்கு வகைகளை ஏற்றிக்கொண்டு தினந்தோறும் விழுப்புரம் வழியாக 20-க்கும் மேற்பட்ட சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.
தண்டவாள பராமரிப்பு பணி
இந்நிலையில் சரக்கு ரெயில் பெட்டிகளின் பாரத்தை தாங்கக்கூடிய வகையில் ரெயில்வே தண்டவாளங்கள் உறுதியாக இருக்கின்றனவா என்று அவ்வப்போது பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது விழுப்புரம் ரெயில் நிலைய யார்டு அருகில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் ரெயில்வே என்ஜினீயரிங் பிரிவினரும், சிக்னல் பிரிவினரும் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளங்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்களை பொருத்தும் பணிகளும், புதியதாக ஜல்லிக்கற்கள் மற்றும் மண் போடும் பணிகளும், பாயிண்ட் மாற்றம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக திருச்சியில் இருந்து 3 ராட்சத பேக்கேஜிங் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல் தண்டவாளங்களில் ஆயில் மற்றும் கிரீஸ் பூசும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியில் ரயில்வே ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதல் மேலாளர் ஆய்வு
இப்பணிகளை திருச்சி கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் ரெயில், சரக்கு ரெயில்கள் தடம் புரளாமல் எளிதாக சென்றடையும் வகையில் தண்டவாளங்களை வலுப்படுத்தும் விதமாகவும், பிற்காலத்தில் ரெயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கு வசதியாகவும் இந்த பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

