![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Leopard Attack: 6 வயது குழந்தையை தாக்கி கொன்ற சிறுத்தை சிக்கியது.. திருப்பதி கோயில் அருகே நடந்தது என்ன?
சமீப காலமாகவே வனப்பகுதிகளில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தங்கள் வனப்பகுதிகள், காப்புக்காடுகளை விட்டு வெளியே வருவது அதிகரித்து வருகின்றது.
![Leopard Attack: 6 வயது குழந்தையை தாக்கி கொன்ற சிறுத்தை சிக்கியது.. திருப்பதி கோயில் அருகே நடந்தது என்ன? Leopard That Killed 6 Year Old Girl Near Tirumala Tirupati Temple Captured says police Leopard Attack: 6 வயது குழந்தையை தாக்கி கொன்ற சிறுத்தை சிக்கியது.. திருப்பதி கோயில் அருகே நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/14/4ee9c5f776d38789dada270bffefb2c61691994524182729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமலை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறை அதிரடி முயற்சிகளை மேற்கொண்டனர்.
6 வயது குழந்தையை அடித்து கொன்ற சிறுத்தை பிடிப்பட்டது:
இதன் விளைவாக, இன்று சிறுத்தை பிடிபட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு 5 இடங்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவானதைத் தொடர்ந்து, வனத்துறையினர் பொறி வைத்து சிறுத்தையை பிடித்தனர். அப்பகுதியில் சுமார் 12 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுடன் திருப்பதி மலை ஏறும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி பெற்றோரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து டி.டி.டி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மலையேற வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம்:
திருமலை திருப்பதி தேவஸ்தானம், மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்களின் மலை ஏறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிக்கட்டுகள் மற்றும் சாலை என இரண்டிலும் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி. கருணாகர ரெட்டி இன்று மாலை உயர்மட்டக் கூட்டத்தை நடத்துகிறார்.
சிறுத்தையால் கொல்லப்பட்ட குழந்தையின் பெயர் லக்ஸிதா. கடந்த வாரம், தனது பெற்றோருடன் மலையேறச் சென்றபோது தெரியாமல் அவர் காட்டுக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
தொடரும் மனித - வனவிலங்கு மோதல்:
திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோயில் செல்லும் படிக்கட்டுகளில் அமைந்துள்ள மற்றொரு கோயிலுக்கு அருகில் உள்ள புதர் நிறைந்த பகுதியில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் உள்ள காயங்கள், வனவிலங்கால் அவர் அடித்து கொள்ளப்பட்டதை உறுதி செய்தது.
கடந்த ஜூன் மாதம், அப்பகுதியில் மூன்று வயது சிறுவன் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளானான். ஆனால், சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டான். சுமார் 150 கேமராக்களைப் பயன்படுத்தி, அந்த சிறுத்தை சிக்கிய பின்னர் மற்றொரு காட்டில் விடப்பட்டது.
சமீப காலமாகவே, வனப்பகுதிகளில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தங்கள் வனப்பகுதிகள், காப்புக்காடுகளை விட்டு வெளியே வருவது அதிகரித்து வருகின்றது. சாலைகளில் உலா வந்து, குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை பார்த்து மக்கள் பயம் கொள்கின்றனர்.
மனிதர்களின் செயல்பாடுகள் விலங்குகளையும் பயம் கொள்ள வைக்கிறது. இதனால் மனித - வன விலங்குகள் இடையேயான மோதலும் அதிகரிக்கிறது, உயிரிழப்பும் அதிகரிக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)