மயிலாடுதுறை : "எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்” - ஊர்க்காவல் படையினர் கோரிக்கை..!
கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது பணிவரையறையைத் தாண்டி பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு 3 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊர்க்காவல்படை 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து கடந்த 58 ஆண்டுகளாக காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்கபடுத்துதல், திருவிழாக்களின் போது பாதுகாப்புப் பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்கள் ஓட்டும் பணி உள்ளிட்டவற்றை ஊர்க்காவல் படையினர் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு 152 ரூபாய் வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக 2800 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு 560 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டது. இதன் மூலம் ஊர்க் காவல் படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு 560 ரூபாயாக ஆக உயர்த்திய தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் பணி நாட்களின் எண்ணிக்கையை 25 நாட்களிலிருந்து 5 நாட்களாக குறைந்தது. இதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் 2800 ரூபாயை தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரப்பூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு 18,000 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அதில் ஆறில் ஒரு பங்கு கூட ஊதியமாக வழங்கப்படுவதில்லை. தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக காவல்துறையில் சேர்க்கப்படுவதைப் போல ஊர்க் காவல்படை வீரர்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் காவல்துறையில் சேர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும்
இது தொடர்பாக ஊர்காவல் படை வீரர்கள் சிலர் கூறும்போது, "தமிழக காவல்துறைக்கு உதவியாக இருந்தபோதும் ஊர்காவல் படை பணி என்பது நிரந்தரம் இல்லாத பணி. இதில் பணியாற்றுவோருக்கு இயல்பான நாட்களில் வாரத்தில் 10 நாட்கள் மட்டும் பணி வழங்கப்படும் எனவும் நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியம். அதேநேரம், தேர்தல், திருவிழா, ஊரடங்கு போன்ற காலங்களில் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுத்தப்படுவோம். அப்போதும் கூட சராசரியாக வாரத்துக்கு 10 நாள் என்ற வீதத்தில் தான் ஊதியம் கிடைக்கும். இதர சலுகைகளோ, பணப்பலன்களோ இல்லாதபோதும் கூட வாழ்வாதாரத்துக்காக இந்தப் பணியையே நம்பி செய்து வருகிறோம்" என தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் பணி புரியும் ஊர்க்காவல் படையினர் கூறுகையில், "ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் 440 பேர் ஊர்க்காவல் படையில் பணி புரிவதாகவும், இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காலமான தற்போது தங்களுக்கான 10 பணி நாட்களை கடந்து மாதம் முழுவதும் பணியில் நேரம் பாராமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் ஊர்காவல் படையினரான தாங்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளோம்.
இந்நிலையில் குறைந்தபட்ச ஊதியத்தில் காலம் நகர்த்தி வரும் ஊர்காவல் படையினர் தொற்றால் உயிரிழந்தால் அந்த குடும்பமே முழுவதும் முடங்கி நிலையும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபடும் ஊர்காவல் படையினரையும் முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு அரசு அறிவித்து உதவிடவேண்டும் என்றவர்கள், மார்ச், ஏப்ரல், மே என இந்த பேரிடர் காலத்தில் இரவு பகலாக பணிபுரிந்த எங்களுக்கு ஊதியம் தரப்படவில்லை என்றும், இதனால் உணவிற்கு கூட கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என வேதனை தெரிவிக்கும் ஊர்க்காவல் படையினர் தங்கள் உழைத்த உழைப்பிற்கான ஊதியத்தை இந்த பேரிடர் காலத்தில் மாதம் தவறாமல் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும், காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதுபோல கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை தங்களுக்கும் அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets