ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் இதர பொருளாதார பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தஞ்சாவூர்: ஆர்ஆர்பி குரூப் டி தேர்விற்கு நாளை 2-ம் தேதியுடன் விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் ஆகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே உங்களின் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.
இந்தியன் ரயில்வேயில் உள்ள 22 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் அனுப்ப நாளை மார்ச் 2-ம் தேதியே கடைசி நாள் ஆகும். ரயில்வேயில் நிலை 1 கீழ் உள்ள பல்வேறு பிரிவு உதவியாளர் பதவியில் உள்ள 22 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள பணியிடங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 31 முதல் பெறப்பட்டு வருகிறது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மார்ச் 2-ம் தேதியே கடைசி நாள் ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த மார்ச் 4-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. விண்ணப்பம் திருத்தம் செய்ய மார்ச் 5 முதல் 14 வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
ரயில்வே குரூப்-டி பிரிவு உதவியாளர் பணியிடங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திற்கு சென்றவுடன் அதில் முதல் இடத்தில் CEN 09/2025 என இடம்பெற்று இருக்கும். அதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
பணிக்கான அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கும். மேலும் மண்டலத்திற்கு ஏற்ப காலிப்பணியிடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை முழுமையாக படித்து, விண்ணப்பிக்க தொடங்கலாம். CEN 09/2025- ஆன்லைன் விண்ணப்பம் லிங்க் இடம்பெற்று இருக்கும். அதில் முதலில் பதிவு செய்து, பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
எலக்ட்ரிக்கல், டிராபிக், மெக்கானிக்கல், சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேஷன், தண்டவாளம் பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் உதவியாளர் பதவியில் 22,195 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தெற்கு ரயில்வேயில் 1,036 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இப்பணியிடங்களுக்கு 2026 ஜனவரியுடன் குறைந்தபட்சம் 18 முதல் 33 வயது வரை இருக்கலாம். ஒபிசி, எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பணிக்கான உடற்தகுதிக் கொண்டிருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கான நிலை 1 கீழ் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ரயில்வே குரூப்-டி பதவிகளுக்கு கணினி வழித் தேர்வு, உடற்தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவை நடத்தப்படும். கணினி வழித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு தகுதி அடைவார்கள்.
இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதில் ரூ.400 தேர்வை எழுதிய பின்னர் திரும்பி அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் இதர பொருளாதார பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணமும் தேர்விற்கு பின்னர் திரும்பி அளிக்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஜனவரி 31 முதல் பெறப்பட்ட நிலையில், நாளை மார்ச் 2-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. சொல்வதை எழுதுபவர் விவரங்களை அளிக்க மார்ச் 15 முதல் 19ம் தேதி வரை அளிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் மிஸ் பண்ணிடாதீங்க.






















