TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அருகில் இருந்த கொடிக்கம்பம் மேடையில் இருந்த ஜெகதீஷ் பாண்டியன் தலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போதும் நாஞ்சில் சம்பத் தனது பேச்சை நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கரூர் 80 அடி சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, நடிகர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதில் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், நாஞ்சில் சம்பத் மற்றும் ஜெகதீஷ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நாஞ்சில் சம்பத் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் நாற்காலிகளைத் தலையில் கவிழ்த்தபடி உரையை கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அருகில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் எதிர்பாராத விதமாக அந்த கொடிக்கம்பம் திடீரென சரிந்து மேடையில் நின்றிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் தலையில் பலமாக விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் காயமடைந்த அவரை உடனடியாக மீட்ட நிர்வாகிகள், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து நிகழ்ந்த தருணத்திலும், அதைப் பொருட்படுத்தாமல் நாஞ்சில் சம்பத் தனது உரையைத் தொடர்ந்து பேசியது அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சன வலையில் சிக்கியுள்ளது























