டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும், மோசடியாக உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கு தொடங்கி மோசடியாக பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்.

தஞ்சாவூர், மார்ச்.1- டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை நகர பகுதியைச் சேர்ந்தவர் வி.சினேகா (41). சித்தா டாக்டர். திருமணமான இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போனுக்கு கடந்த 6.12.2025ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர், தான் டிராய் அமைப்பிலிருந்து பேசுகிறேன். உங்களது ஆதார் எண் மூலம் செல்போன் எண் வாங்கப்பட்டு மும்பையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு ரூ.2 கோடி மோசடியாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பை போலீஸ் ஸ்டேஷனில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை போலீசார் உங்களை தொடர்பு கொள்வார்கள் என கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகாவுக்கு சிறிது நேரம் கழித்து மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்மநபர் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும், மோசடியாக உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கு தொடங்கி மோசடியாக பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம். இதன் காரணமாக உங்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மன்னிப்பு கடிதம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சினேகா மன்னிப்பு கடிதம் எழுதி அந்த மர்மநபர் கூறிய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து சினேகாவை தொடர்பு கொண்ட மர்ம நபர், நாங்கள் கூறும் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புங்கள். தங்கள் மீது தவறு இல்லை என விசாரணையில் தெரிய வந்தால், பணம் திரும்ப அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சினேகா ஆன்லைன் வாயிலாக 7 தவணைகளில் மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரூ.52.14 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார்.
பின்னர் மர்ம நபரின் எண்ணுக்கு பெண் டாக்டர் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தன்னிம் இருந்து பணத்தை மோசடியாக பெற்றுள்ளனர் என்பதை சினேகா உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி நடந்த வங்கி கணக்குகள் மும்பை, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வெளி மாநில வங்கி கணக்குகள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தந்த வங்கிகளுக்கு தகவலை தெரிவித்த போலீசார் முதற்கட்டமாக உத்தரப்பிரதேச மாநில வங்கி கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்தை மீட்டுள்ளனர். மற்ற வங்கி வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் (பொ) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்று டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம். டிஜிட்டல் அரெஸ்ட் என்பது மோசடியான ஒன்றாகும். இவ்வாறு கூறி மிரட்டல் வந்தால் அந்த அழைப்பை நிராகரித்து விட வேண்டும். உடனடியாக சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகளை நம்பி அவர்களின் மிரட்டலுக்கு பயந்து மர்மநபர்கள் கூறும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.






















