DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
திமுக-விடம் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் கோரிக்கையை முன்வைத்து வந்த காங்கிரஸ் தற்போது அந்த கோரிக்கையில் மெளனம் காட்டி வருகிறது.

தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆளுங்கட்சியான திமுக-வும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
அழுத்தம் தந்த காங்கிரஸ்:
திமுக கூட்டணியில் நீண்டகாலமாக உள்ள கட்சி காங்கிரஸ். ஆனால், இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுக தலைமைக்கு வெளிப்படையாக அழுத்தம் கொடுத்து வந்தனர். அவர்களின் இந்த அழுத்தத்திற்கு காரணம் விஜய்யின் தவெக-வாக இருந்தது.
ஆனால், தற்போது காங்கிரசால் திமுக-விடம் அதிக தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வலுவாக முன்வைக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. விசிக-விற்கு வெளிப்படையாக கூட்டணி அழைப்பை விஜய் விடுத்தும், திருமாவளவன் கைவிரித்த நிலையில் காங்கிரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
தமிழக காங்கிரசிலும் பலரும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் ஒதுக்கீடு கோரிக்கைக்கு இணங்கும் விஜய்யுடன் கூட்டணி சேர ஆர்வம் காட்டினர். விஜய்யை காரணம் காட்டியே திமுக-விற்கு கடும் அழுத்தம் தந்து வந்தனர். ஆனால், தற்போது விஜய்யிடம் இருந்து சங்கீதா விவாகரத்து கேட்டிருப்பதும், விவாகரத்திற்கான காரணமாக விஜய் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் விஜய் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவெக-விற்கும், விஜய்க்கும் மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியுள்ளது.
வாயடைத்துப் போன காங்கிரஸ்:
இந்த சூழலில், தவெக-வுடன் கூட்டணிக்குச் செல்வது ஆரோக்கியமற்றது என்று காங்கிரஸ் கருதுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ள திமுக காங்கிரசிடம் கறார் காட்டி வருகிறது. 2 ராஜ்யசபா சீட்டு, கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக தொகுதிகள் ஒதுக்கீடு கேட்டு திமுக-விடம் காங்கிரஸ் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கை வைத்தது. அதேசமயம், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தற்போது காங்கிரஸ் முன்னெடுக்கத் தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு மட்டுமே தற்போது திமுக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதிமய்யம் போன்ற கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதால் கடந்த தேர்தலைக் காட்டிலும் ஓரிரு இடங்களை குறைத்துக் கொள்ளுமாறு திமுக காங்கிரசை வலியுறுத்தியுள்ளது.
எத்தனை இடங்கள்?
இது காங்கிரசுக்கு அதிர்ச்சியை உண்டாக்கினாலும் தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் நீடிப்பதே சிறப்பு என்ற மனநிலையில் காங்கிரஸ் தலைமை கருதுகிறது. இதனால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட அளவிற்கு இடங்களை கேட்டுப்பெற காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிறைவேற்றுமா? அல்லது திமுக-வின் வலியுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்டுப்படுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.























