Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
திமுக கூட்டணியில் இருந்து வழங்கப்படும் ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெறுவதற்கு தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆட்சியில் உள்ள திமுக வசம் அதிகளவு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவி கைவசம் உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், ஒரே ஒரு ராஜ்யசபா இடம் மட்டுமே தர திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டும் காங்கிரஸ்:
திமுக-விடம் இருந்து ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த ஒரு சீட்டைப் பெறுவதற்கு தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலே அதிகளவு உட்கட்சி மோதல் கொண்ட ஒரு கட்சியாக தமிழக காங்கிரஸ் உள்ளது.
ராஜ்யசபா உறுப்பினர் பதவியைப் பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் படையெடுக்கத் தொடங்கி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர். எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர், மத்திய அமைச்சராக இருந்தவர் என்ற பல ஆண்டு அனுபவம் கொண்டவராக இருந்தபோதிலும், கடந்த முறை அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.
டெல்லியை நெருங்கும் முன்னாள் தலைவர்கள்:
சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்கப்படாது என்றே கருதப்படுகிறது. இதனால், ராஜ்யசபா உறுப்பினர் பதவியைக் கைப்பற்ற அவர் காங்கிரஸ் தலைவர் கார்கே-விடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், கார்கே திருநாவுக்கரசரின் சமீபத்திய செயல்பாடுகளில் திருப்தியில்லை என்று வெளிப்படையாகவே அதிருப்தியாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரான கே.எஸ்.அழகிரியும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக களத்தில் குதித்துள்ளார். நீண்ட காலமாக கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் காணப்படும் அவர் இந்த பதவியைப் பெற ஆர்வம் காட்டி வருகிறார். இவர் மட்டுமின்றி முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்பி விஸ்வநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆக டெல்லித் தலைமையை நெருங்கி வருகின்றனர்.
ராகுல் காந்தி முடிவு என்ன?
ஆனால், ராகுல்காந்தி இந்த விவகாரத்தில் வேறு ஒரு முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் பவன் கேரா. முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கு பக்கபலமாக இருந்தவர். தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருக்கும் இவரை தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ராஜ்யசபாவிற்கு அனுப்ப ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை தமிழ்நாட்டின் சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்ப திமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனால், இந்த ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை திமுக காங்கிரசுக்கு வழங்கினாலும், காங்கிரசின் சார்பில் யார் செல்ல வேண்டும் என்பதில் திமுக-வின் முடிவே வலுவானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.























